பொன் மாலை பொழுது

இங்கு இருக்கும் ஶ்ரீ சஞ்சய் சுப்ரமணியன் அவர்களின் படத்தையும், தலைப்பையும் இணைத்து, நான் ஏதோ சஞ்சய் அவர்களின் கச்சேரிக்கு சென்றேன் என்று நீங்கள் நினைத்தால்...... உங்கள் நினைப்பிற்கு ஒரு பெரிய "ஓ".

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வரும் பொழுது அடடா....சென்னையில்  டிசம்பர் சீஸன்க்கு இல்லாமல் போனோமே என்ற வருத்தம் வரும்.  சென்னையில் இருக்கும் நாட்களில் ஒன்றும் கிழிக்கவில்லை.  ஊர் விட்டு ஊர் வந்தால் தான் எல்லா அருமைகளும் தெரிகிறது.  இப்படியாக நான் டிசம்பர் சீஸனை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் தான்.....நேற்று ஶ்ரீ சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பரை அக்டோபரிலேயே எங்கள் ஊருக்குக் கொண்டு வந்து விட்டார்.

நான்கு மணி நேர கச்சேரி உட்கார்ந்து கேட்பதற்கு பொறுமை இருக்குமோ இருக்காதோ என்ற எண்னத்தை பொய்யாக்கி நான்கு மணி நேரத்தை தன் வசீகர குரலால்  நான்கு நோடியாக மாற்றிவிட்டார்.   நாட்டையும் ,ஆபோகியும், கானமுர்த்தியும், ராகாமாலிகை நடுவில் எட்டிப் பார்த்த சஹானாவும்....கிறங்கி தான் போனோம்.  புன்னாகவராளி அவர் பாடாமாலேயே பல பேர் இருக்கையில் அமர்ந்தபடி மயங்கி ஆடிக் கொண்டிருந்தது பார்ப்பதற்கு அருமையாய் இருந்தது.  அவர் தான் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தவரும், மிருதங்கம் வாசித்தவரும் அசத்தி விட்டனர்.  நல்ல கச்சேரி என்பது  கணவன், மனைவி, குழந்தைகள் என்று  இணைந்த அழகான குடும்பம் போல.  பாடுபவர் கணவர் என்றால் பக்கவாத்தியங்கள் மனைவி , குழந்தைகள் போல்.  நேற்று  நடைப்பெற்ற சஞ்சய் அவர்களின் கச்சேரியும் அப்படி தான் ஒரு நல்ல குடும்பம் போல் ரம்மியமாக் இருந்தது.  ஒரு ஆலாபனையில் ஆ...ன....ந்.....த.......ந......ம்......த.......ஆ.....ன....ந்.....த.......ந......ம்......த...... என்று விஸ்தரித்துக் கொண்டிருக்க,  அந்த "ஆனந்தம்" உண்மையிலேயே அங்கு குடி கொண்டிருந்தது.  இப்படியெல்லாம் நான் எழுதியதற்காக என் மனம் நான்கு மணி நேரமும் கச்சேரியிலேயே லயித்திருந்தது என்று சொல்ல முடியாது.  ஆங்காங்கு சென்று விட்டு மீண்டும் கச்சேரியில் வந்து உட்கார்ந்து கொண்டது.  பாடுபவரும், பக்கவாத்தியங்கள் வாசிப்பவர்களும் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. கச்சேரியைக் கேட்க வந்தவர்களும் அனுபவித்து கேட்க வேண்டும்.  நேற்று கேட்க வந்தவர்கள் அனுபவித்துக் கேட்டதோடு நிறுத்தவில்லை.  கச்சேரி முடிந்ததும் கைதட்ட ஆரம்பித்தனர்....நிறுத்த வில்லை.  இந்த கைதட்டல்கள் சஞ்சய் அவர்களின் கச்சேரியைப் போலவே சுவையாய் இருந்தது.  சஞ்சய் அவர்களுக்கு புல்லரித்தோ என்னவோ எனக்கு தெரியாது, அந்த கைத்தட்டல்கள் gave me goose bumps.

கச்சேரியின் டிக்கெட்டில் இரவு உணவும் அடக்கம். எப்பவும் போல் styrofoam டப்பாவில் ஒரு சப்பாத்தியும் சாதமும் கொடுப்பார்கள் என்று நினைத்துப் போனால்....உட்லாண்ட்ஸ் ரெஸ்டாரெண்டின் buffet சாப்பாடு.  பிஸி பேளா முதல் காரட் அல்வா வரை.....அடடா.....அருமையோ அருமை.  செவிக்கு உணவு , வயிற்றுக்கு உணவு எல்லாம் சேர்ந்து நேற்றைய மாலைப் பொழுது தூள் டக்கர்.

மாலைப் பொழுதைப் பற்றி தான் பார்த்தோம். அது "பொன்" மாலைப் பொழுதை ஆகிய தருணம் இதோ,இதோ...

ஏதோ என் பாட்டிற்கு சாப்பிட்டு விட்டு தெரிந்தவர்களுடன் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்புங்கால்....எனக்கு பரிச்சயமில்லாத ஒருவர் அல்ல, இருவர் அல்ல, மூன்று பேர் என்னைப் பார்த்து " நீங்க சுஜாதா தானே? உங்க ப்ளாக் எல்லாம் நான் படிக்கறேன்.  ரொம்ப அருமையா இருக்கு.  விடாம எழுதுங்க....".  அவர்க்ள சொன்ன வார்த்தை வேறு வேறாக இருந்தாலும் சாராம்சம் ஒன்று தான்.  ஏதோ சஞ்சய் அவர்களின் பாட்டை நான் கேட்க வந்தால் என் எழுத்தைப் பற்றிய பாராட்டை என்னைப் புரட்டிப் போட....அது ஒரு பொன் மாலை பொழுது.  என் எழுத்தைப் பாராட்டிய அந்த உயர்ந்த உள்ளங்களுக்கும்,  "நிம்மதியா கச்சேரி கேட்டு எஞ்ஜாய் பண்ணிட்டு வா" என்று என்னை அனுப்பி வைத்த என் கணவருக்கும், எனக்கு இசையை பற்றிய ஞானத்தை அளித்த என் அப்பா அம்மாவிற்கும் நன்றிகள் பல கோடி.

இது போல் பல பொன் மாலை பொழுதுகள் வர காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment