சென்னை புத்தகத் திருவிழா

“ஆடி ஆடி ஃப்ண்டாஸ்டிக் ஆடி” என்று ஆடி தடபுடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது சென்னையில்.  டி.வி.யை திறந்தால் இந்த கடையில் ஆடி தள்ளுபடி, அந்த கடையில் ஆடி தள்ளுபடி என்று எக்கசக்கமாக விளம்பரம்.  ஆனால் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தககத் திருவிழாவைப் பற்றி  விளம்பரம் ஏதுவும் டி.வி.யில் நான் காணவில்லை.  துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், புத்தகங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற எண்ணத்துடன், ராயப்பேட்டை வை.ஏம்.சி.ஏ. திடலில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றேன். இதற்கு  முன்னர் எப்பொழுது சென்னை புத்தகத் திருவிழாவிற்க் சென்றேன் என்று நினைவில் இல்லை.  ஆனால் பள்ளியில் படிக்கும் பொழது,  புத்தக விழாவின் தொடக்க தினத்தில்,(ரிப்பப்ளிக் டே பரேட் போல்) ராதாகிருஷ்ணண் சாலையில், கரகம் ஆடியது நினைவில் இருக்கிறது.   சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் மேடை  அருகே நடனமாடிக் கொண்டு வரும் பொழுது அந்த கரகம் தலையிலிருந்து கீழே விழுந்ததும் நினைவில் நன்றாகவே இருக்கிறது.  அந்த நினைவுகளுடன்  அந்த திடலில் நுழைந்ததும், சென்னை புத்தகத் திருவிழா பேனரைப் பா
ர்த்ததும் என் காதில் ஆயிரம் வீனையின் ஒலி கேட்டது.  பறவைகள் படபடத்தன.  அருவிகள் நீரை வார்த்தன.  வலது காலை எடுத்து வைத்து அரங்கத்திற்குள் நுழைந்தேன்.  மலைத்துப் போனேன். நூற்றிஐம்பதிற்கும் மேல் பதிப்பகங்கள் பங்கு கொண்டிருந்தன.  எந்த அரங்கத்திற்குள் முதலில் போவது என்று குழம்பிப் போனேன். வரிசையாக செல்வதா, இல்லை நமக்கு தெரிந்த பதிப்பகங்களுக்கு செல்வதா என்ற மனது நடத்திய பட்டிமன்றத்தில் "வரிசையாக செல்வதே” வென்றது.  முதலில் “போதிவனம்” என்ற பதிப்பகம்.  உள்ளே சென்றவுடன் கண்ணில் பட்டது “சுஜாதா”வின் புத்தகங்கள்.  ஏதோ காணாததைக் கண்டது போல் மனம் முழுவதும் உவகை.  இத்தனைக்கும் அந்த புத்தகங்களில் பாதி என்னிடம் இருக்கிறது. திருவிழாவை முழுவதுமாக பார்த்துவிட்டு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வோம் என்று வெளியில் வந்தால் பக்கத்து அரங்கில் “பொன்னியின் செல்வன்” ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய் வண்ணத்தில் ஒவியங்களுடன் இருந்தது.  அந்த புத்தகத்தை தூக்கி தூக்கி படிப்பதற்கு முடியுமா என்ற யோசனையில் திரும்பினால்…அட
…..நம் விகடன் பிரசுரம். உள்ளே சென்றால் அவள் விகடனும், அவள் கிச்சனும்  நிறைந்திருந்தன.  அங்கு இருந்தவர் அவள் விகடனைப் பற்றி எனக்கு சொல்ல, “எனக்கே அவள் விகடனைப் பற்றியா….” என்று நினைத்தேன்.  அந்த அரங்கிற்கு பக்கத்தில் நம் லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் ப்ரசுரம்.  இதே போல் பல பதிப்பகங்கள்.  கிழக்கு பதிப்பகத்தில் சுஜாதாவின் புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன.   “திருமகள் நிலையத்தில்” தான் எனக்கு ஞானம் பிறந்தது.  அந்த அரங்கத்தின் ஒரு பாதி பாலகுமாரனின் புத்தகங்கள்.  அப்பப்பா……ஒவ்வொரு புத்தகத்திலும் அவரின் முகம்.    ஒவ்வொரு புத்தகம் எழுதுவதற்கும் அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் எவ்வளவு என்று தெரியவில்லை.  ஆனால் அத்தனையிலும் நான் கண்டது அவரின் அயராது உழைப்பு.  எழுத்தின் மேல் தீரா காதல் இருந்தால் மட்டும் இருந்தால் போதாது, உழைக்கவும் வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்.  இதே போல் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை என்று எழுதாமல் தினம் தினம் எழுதவேண்டும்.  அயராது உழைக்க வேண்டும்.  அப்படி உழைத்தால் என் புத்தகமும் ஒரு நாள் இந்த புத்தகத் திருவிழாவில் இடம்பெறலாம் என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.  கடைசியாக உயிர்மை பதிப்பகம் சென்றேன்.  உயிர்மை பதிப்பகத்தில் தான் சுஜாதாவின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  ”  அந்த அரங்கத்தில் நான் படித்திராத சுஜாதாவின் புத்தகங்கள் நிரம்பி இருந்தன.  எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் திண்டாடிப் போனேன்.  ஒரு வழியாக சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து, சிறிது தூரம் நடப்பதற்குள்…யாரையோ விட்டு பிரிந்த மாதிரி ஒரு உணர்வு.  மீண்டும் அந்த பதிப்பகத்திற்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.  நேரமின்மை காரணமாக செல்ல முடியாமல் போனது.  அமெரிக்காவில் எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாலண்டியராக பங்கேற்று,  புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வருபவர்களுக்கு பல வகைகளில் உதவி புரிவதுண்டு.  அதே போல் சென்னை புத்தகத் திருவிழாவிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொள்ள ஆசை….ஆசை நிறைவேறினால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  











அஞ்சரை பெட்டி மனது


மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள் அஞ்சரை பெட்டியில் இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.  அவ்வாறு தோன்றிய சம்பந்தமில்லா எண்ணங்களின் தொகுப்பு இது.

மழையடிக்கும் சிறுபேச்சு, வெயிலடிக்கும் ஒரு பார்வை:

ஆங்கிலத்தில் "posthumous" என்று ஒரு சொல் உண்டு.  "இறந்த பின்" என்று அதற்கு பொருள்.  "posthumously awarded" என்று அடிக்கடி நாம் கேள்விப் பட்டதுண்டு .   "posthumously awarded" போல் நான் என் அப்பாவிடம் "posthumously scared".  நினைவு தெரிந்த வயது முதலாக என் அப்பா காதல் என்பது மிக தவறு என்று சொல்லாமல் சொல்லி வளர்த்திருக்கிறார்.   காதலிக்கப்படுவதும் தவறு, காதல் வயப்படுவதும் தவறு என்று எங்களுக்கு விதித்த ஆணை.  வாழ்க்கையில் கடைப்பிடித்த என் அப்பாவின் ஆணை  எழுத்திலும் வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டது.  சற்றும் எதிர்பாராத விதமாக என் மனதில் தோன்றியது அழகான காதல் கதை.  "அழகான" என்று சொல்லவது தவறு.  "poignant love story" என்பது சரி.  அந்த கதைக்கு வடிவம் கொடுத்து, அதில் வரும் கதாபாத்திரங்களுடன் சில நாட்கள் வாழ்ந்து, மனதில் முழுக்கதையும் (வசனம் உட்பட ..) எழுதி, அதை கம்ப்யூட்டரில் டைப் செய்யும் பொழுது.....என்னால் ஒரு வார்த்தைக் கூட டைப் செய்ய முடியவில்லை.  ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, எத்தனையோ நாட்கள் நானும் முயன்று பார்த்து தோற்று விட்டேன்.  என் மனதை சுற்றி இருக்கும் என் அப்பாவின் லஷ்மண் ரேகா இன்றும் அழியாமல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.  அத்துடன் என் காதல் கதைக்கு விடை கொடுத்து விட்டேன்.  மழையடிக்கும் சிறுபேச்சு, வெயிலடிக்கும் ஒரு பார்வை என் கதையில் இனி இல்லை. 

போறாளே பொன்னுத் தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு:

"கண்ல தண்ணீ டேங்க் வச்சிருக்கயா?" என்று என் வீட்டில் என்னை கேலி செய்யும் அளவிற்கு நான்  அழுவேன்.  தெனாலியில் கமல் அவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவது போல் நான் எல்லாவற்றிற்கும் அழுவேன்.  அதுவும் இந்தியா செல்லும் பொழுது கணவரை விட்டு செல்வதற்காக அழுவேன்.  இந்தியாவிலிருந்து வரும் பொழுது அம்மாவை விட்டு வருவதற்காக அழுவேன். ஏர்ப்போர்ட்டில் எப்பொழுதும் அழுத கண்ணும், சிவந்த முகமுமாக காட்சி தருவேன்.  இந்த அழுகையினால் பலன்? எப்பொழுதும் யாராவது ஒருவர்/ஒருத்தி தானாய் வந்து என்னுடன் வந்து பேசுவார்கள்.  கடந்த பதினைந்து வருடமாக இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.  சென்னை ஏர்ப்போர்ட்டில் ஒரு முறை என் கண்ணிலிருந்து வரும் கண்ணீரைப் பார்த்துவிட்டு அந்த டிக்கெட்டிங் நபர் பயந்து விட்டார்.  கவு
ண்டரை விட்டு வெளியே வந்து என் அழுகைக்கான காரணம் கேட்க,  நானும் விளக்கினேன்.  அழும் வேளையில் நான் பொய் சொல்ல மாட்டேன்.  அவரும் அவரின் அக்கா திருமணம் முடிந்து வெளிநாடு போன சமயம், அவர் வீடு எவ்வாறு அழுதது என்று பகிர்ந்து கொண்டார்.  இந்த முறையும் இந்தியா செல்லும் பொழுதும் அங்கிருந்து வரும் பொழுதும் பொல பொலவென்று கண்ணீர் உண்டு.

முறை தான் ஒரு முறை தான் உன்னைப் பார்த்தால் அது வரமே:

இந்தியன் படத்தில் ஒரு வசனம் உண்டு:  "புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல..."  அதே போல் என் அப்பா இந்த உலகத்தில் இல்லை என்று புத்திக்கு தெரிகிறது, மனதிற்கு தெரியவில்லை.  என் அப்பா இருந்த வரை நான் சென்னை செல்லும் பொழுது ஏர்ப்போர்ட்டில் தவறாமல் காத்திருப்பார்.  அவருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது.  எப்பொழுதும் அங்கே நின்று  கொண்டிருப்பார்.  கஸ்டம்ஸ் முடிந்து, எஸ்கலேட்டரில் இறங்கி, கைப்பைகளை செக்யூரிட்டி செக் செய்து எடுத்துக் கொண்டு,  பெட்டிகளை எடுக்க கன்வேயர் பெல்ட்க்கு போகும் பொழுது, ஏர்ப்போர்ட் வாசலில் காத்திருப்பவர்களைப் பார்க்க முடியும்.  அந்த இடத்தை நான் கடக்கும் பொழுது என் அப்பா கையாட்டுவார்.  இரண்டு வருடங்களுக்கு பின், என் அப்பாவைப் பார்க்கும் பொழுது முன்னமே சொன்னது போல் கண்ணீர் வரும். பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது என் அம்மாவும், மாமியாரும், மாமனாரும், மச்சினரும் அங்கு இருந்தாலும் என் அப்பா மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிவார்.  அவருக்கும் பேச முடியாமல் தொண்டை அடைத்து போகும்.  என் அப்பாவின் மறைவிற்கு பிறகு ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுதும் மனம் இந்த அனுபவம் வேண்டும் என்று துடிக்கும்.  இந்த முறையுக் அதே போல் தான்.  அப்பா இனி இல்லை என்று புத்திக்கு தெரிந்தாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.  M.Kumaran S/o Mahalakshmi என்ற படத்தில் நதியா மறைந்த பின் மீண்டும் வருவது போல், என் அப்பாவும் மீண்டும் வரவேண்டும்.   என் அப்பாவைப் மீண்டும் ஒரு முறை பார்த்தால் அது வரம்.

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்:

மோசம்.  மிகவும் மோசம்.  அதாவது நம் தலைவர்....திரு. ரஜினிகாந்த் அவர்கள் அமெரிக்கா வந்திருக்கிறாராம்.  ஜீலை இரண்டாம் வாரம் இந்தியா திரும்பி செல்கிறாராம்.  அவரை யார் ஜீலை இரண்டாம் வாரம் இந்தியா திரும்ப சொன்னது? என்னுடன் வர வேண்டியது தானே.....போன முறை நான்கு நிமிடத்தில் அவரைத் தொலைத்தேன்.  இந்த முறையும் பக்கத்தில் நெருங்கி வரும் சமயம் தொலைத்து விட்டேன்.  அவரைப் பார்த்து என்ன எதாவது பேச போகிறேனா?  கட்டாயமாக இல்லை.  பின் எதற்காக? நானும் அவரை நேரில் பார்தேன் என்று சொல்வதற்காக.  இதில் நான் மட்டும் ஆசைப் பட்டால் போறாது.  அவரும் சுஜாதாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டால் தான்.........சரி, சரி, உங்கள் கூச்சல் என் காதுகளை வந்தடைந்துவிட்டது.  நானும் அடங்கிவிட்டேன். இருந்தாலும்  மேகம் விடும் தூது, மழை விடும் தூது போல்...இது என் எழுத்து விடும் தூது.  ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் இருக்க ஆசைப் பட்டாலும் நான் வேண்டுவது ஒரு நொடிப் பொழுது.  

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்:

நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு  என் எழுத்தை காசாக்க நினைத்து "எழுத்தாளராக" வேலைப் பார்த்தது.  என் ஆசைக்கு எழுதுவது போய் அவர்கள் சொல்லவதை எழுதி....வேண்டாம். தேவையில்லை.  பத்திரிக்கைகளும் இது போல் தான்.  தொலைக்காட்சி டி.ஆர்.பி. ரேட்டிங்க் போல், பத்திரிக்கைகள் விற்பனை பெறுகுவதற்கு கதை, கட்டூரைகளில் அவர்கள் கைவண்ணத்தைப் புகுத்துவதால்  எழுத்தாளர்களின் அசல் எழுத்துக்கள் அழிக்கப் படுகின்றன . இது எனக்கு மட்டும் நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்பொழுது இருக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தான் என்று படித்து புரிந்து கொண்டேன். நான் எழுத்தாளாரை மாறிய இடம் என் வலைப்பூ(blog).  இங்கு எழுதுவதை விட வேறு எங்கும் எனக்கு சுகம் இல்லை என்று புரிந்து கொண்டேன்.  எழுதுவது ஒரு வரம் என்றால், இந்த எழுத்தால் கிடைத்த எண்ணிலடங்கா நட்பு மிகப் பெரிய வரம்.  திடீர் திடீர் என்று தெரியாதவர்களிடம் இருந்து வரும் பாராட்டுகள்....என் வாழ்க்கையின் மிகப் பெரிய பொக்கிஷம். "தெரியாதவர்கள்"  பின் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாய் மாறுவது வேறு விஷயம்.  இரு கோடுகள் போல் என் எழுத்து சிறிய கோடு.  அதனால் கிடைத்த நட்பு பெரிய கோடு.  ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் நான் பிறந்தால் இந்த இரு கோடுகளும் என்னுடன் இருக்க வேண்டும்.

இன்னும் பல பல எண்ணங்கள்.  அஞ்சரை பெட்டியில்  மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள்  இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.