இப்படியும் ஒரு கொலு

மாமியார் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் கிடையாது .  எனக்கும் இது நாள் வரையில் கொலு வைக்க வேண்டும் என்ற ஆசையும் வர வில்லை.  கொலு வைப்பதற்கு உண்டான creative sense எனக்குக் கிடையாது.  வீட்டை mess ஆக வைத்துக் கொள்ளத் தெரியுமே தவிர, கலைப் பொருட்கள் எல்லாம்  நிறைத்து அழகாய் வைத்துக் கொள்ளத் தெரியாது.  எங்கள் வீட்டில் மாட்டி இருக்கும் ஒரே கலைத் தோரணம் "Happy Birthday" தோரணம். என் பெண்ணின் பிறந்த நாளுக்காக  நான்கு வருடங்களுக்கு முன்னால் மாட்டியத்  தோரணம்.  வருடா வருடம் பிறந்த  நாளுக்காக மாட்ட வேண்டாம், permanent ஆக இப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று நாங்கள் யாருமே அதைக் கழற்ற துணியவில்லை.  இப்படி இருக்கையில் எப்படி கலை நயத்துடன் கொலு வைப்பது. ம் போடத் தெரியாது.  அதற்கும் மேலாக  கோலம் போடத் தெரியாது.  எங்கள் வீட்டு பெருமாள் சன்னதியில் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரே கோலம் தான்.  அந்த பெருமாளே வந்து இறங்கி  "பதினைந்து வருஷமா ஒரே கோலம் தான் போட்டுண்டு இருக்க...தயவு செஞ்சு வேற கோலம் போடு, " என்று கேட்டால் கூட வேறு கோலம் எனக்கு போடத் தெரியாது.  திருவிளையாடல் படத்தில் வருவது போல் மண்டபத்தில் யாராவது போட்ட கோலத்தைக் காப்பி அடித்து தான் நான் போட வேண்டும்.  என்னுடைய creative sense  அப்படி... இந்த அழகில் எப்படி கொலு வைப்பது.... மேலும் இந்த வயதான காலத்தில் பொம்மைகளை வாங்கி, கொலு வைத்து, தினமும் சுண்டல் செய்து,  கொலு முடிந்த பின் பத்திரமாக எடுத்து வைத்து....அப்பப்பா....மலைப்பாக இருக்கிறது.  ஆனாலும் இந்த வருடம் கொலு வைக்க வேண்டும் என்று குறுகுறுப்பு விடாமல் இருந்து கொண்டே இருந்தது.  வழக்கம் இல்லை, என்னிடம் பொம்மைகளும் இல்லை....எப்படி கொலு வைப்பது என்று யோசிதத்து யோசித்து...கடைசியாக பல்பு எரிந்தது...

உங்களைப் போல் எனக்கும் புத்தகங்கள் பிடிக்கும்.  புத்தகங்களால் ஏற்படும் நன்மைகள் பல என்றாலும்....எனக்கு மிகவும் பிடித்தது....ஒரு பார்க்கிலோ இல்லை வேறு எதாவது public placeஇலோ புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு படிப்பது போல் பாவலா செய்தால்....அனாவசியமாக நம்மை யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.....அதற்கும் மேலாக இந்திய/அமெரிக்க/சீன/கோரிய/ஜப்பான் வீட்டு வம்புகள்  தானாய்  காதில் விழும்.... பிற்காலத்தில் நான் பெரிய நாவல் ஒன்று எழுதினால்...... அந்த வம்புகள் பயன்படும்.  மிக முக்கியமாக டி.வி. பார்ப்பதிலிருந்து எனக்கு விடுதலை பெற்று தந்தது இந்த புத்தகங்கள்.  நமக்காக நன்மை செய்யும் புத்தகங்களை வைத்து கொலு வைத்தால் என்ன என்பது தான் அந்த பல்பு.

குழந்தைகள் புத்தகம், சமையல் புத்தகங்கள், உடல் ஆரோக்கிய புத்தகங்கள், கதை புத்தகங்கள் என எல்லா genre இலும் என்னிடம் புத்தகங்கள் இருந்தாலும்....கொலு வைத்தால் எப்படி வைப்போம் என்று யோசித்து.....

முதல் படியில் முதலில் ஸ்வாமி இராமானுஜர் .  அவருக்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள்.   அதற்கு அடுத்து கிருஷ்ணர் கதை சொல்லும் பாகவதமும், ராமர் கதை சொல்லும் ராமாயணமும்.  அதற்கு பிறகு பகவத் கீதை...நான் பகவத் கீதை படிக்கக் காரணம் ஆனவர் பின்னர் வருவார்.

இரண்டாவது படியில் பிரஹலாதனுடன் கூடிய சாந்த நரசிம்மர்.  ஹிரண்யகசிபுவிற்கு தான் நரசிம்மர் உக்கிரம்.  நமக்கெல்லாம் நரசிம்மர் என்றுமே சாந்தம் தான்.  அடுத்து தசாவதாரம். மீண்டும் கிருஷ்ணர். பிறகு எந்த நேரமும் நாராயண நாமம் சொல்லும் நாரதர்.

மூன்றாவது படியில் "திருவரங்கன் உலா". அன்னிய படையெடுப்பின் போது ஶ்ரீரங்கதை விட்டு பிரிந்து காடு மேடேல்லாம் சுற்றித் திரிந்து, டில்லி பாதுஷா அரண்மனை சென்று அவர் பெண்ணை மயக்கி, மீண்டும் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த அரங்கனின் கதை.  சிறு வயதில் ஒவ்வொரு annual leave போதும் தவறாமல் படித்த புத்தகம்.  எத்தனை முறை படித்தாலும் அப்பொது தான் புதிதாய் படிப்பது போல் ஒரு மாயம்.  அந்த புத்தகத்தில் அரங்கனே இருக்கிறாரோ என்று பல முறை நினைத்ததுண்டு.

நான்காவது படியில் பாரதியார் மற்றும் கண்ணதாசன்.  நான் பகவத் கீதை படிப்பதற்குக் காரணமான பாரதியார்.  எத்தனையோ முறை படித்தும் பகவத் கீதை புரிந்ததில்லை.  பகவத் கீதையே வேண்டாம் என்று இருந்த போது தான் திரு. சோவின் பகவத் கீதையின்  கேட்க நேர்ந்தது.   பாரதியாரின் உரையைக் கொண்டு மிக மிக எளிமையாய் ஸ்லோகங்களுக்கு  விளக்கம் அளித்திருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் தன் விஸ்வரூபத்தைக் காட்டும் பதினொராவது அத்தியாயம் மிக அருமை.  பாரதியாரின் பாடல்களைக் கேட்டதுண்டே தவிர, அவரை அதிகம் படித்ததில்லை.  பகவத் கீதைக்கு பிறகு அவர் பால் பித்து பிடித்து, படிக்கத் தொடங்கி....இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். பாரதியார் கீதைக் கற்றுக் கொடுத்தார்.  கண்ணதாசன் இந்துமதத்தின் உயர்வை "அர்த்தமுள்ள இந்துமதம்" மூலம் கற்றுக் கொடுத்தார்.

ஐந்தாவது படி.....எழுத்தறிவித்தவன் இறைவன்.  எனக்கு எழுத்தை அறிவித்தவர் எழுத்தாளார் சுஜாதா.  சிறு வயதில் சுஜாதா கதைகள் படிக்க அனுமதியில்லை.  சுஜாதாவை நான் அதிகம் படித்தது அமெரிக்கா வந்த பிறகு தான். சென்னையிலிருந்து வரும் போது சுஜாதா புத்தகங்கள் வாங்கிக் கொண்டு..இங்கு அமெரிக்கா வந்து பரீட்சைக்குப் படிப்பது போல் மும்மரமாகப் படித்து, படித்து, படித்து...அப்படி படித்த்தால் தான் நான் எழுதுகிறேனோ என்று நான் நினைப்பதுண்டு...சுஜாதா இல்லை என்றால் நான் எழுத்துப் பக்கம் வந்திருப்பேநா என்று தெரியவில்லை.  எழுத்தை சுஜாதா அறிவித்தார்.  இறைவனை  அதுவும் நம் மனதில் இருக்கும் இறைவனை திரு. பாலகுமாரன் காண்பித்தார். தினமும் ஒரு பக்கமாவது அவர் எழுத்தைப் படிப்பது பழக்கமாகிவிட்டது.

இத்துடன் என் கொலு முடிந்தது....இந்த புத்தகங்களை வைக்கும் போது "லூசு மாதிரி ஏதாவது பண்றோமோ" என்று தோன்றியது.  வைத்து முடித்த பின் கிடைத்த மன நிறைவு, சந்தோஷம் மதிப்பற்றது.  இது எனக்கே எனக்கான கொலு.  யாரிடமும் சொல்லவில்லை. புத்தகங்களைக் கொண்டாடும் சரஸ்வதி பூஜை அன்று வாயையும் கையையும் மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை....

புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய என் அம்மாவிற்கும், தங்கள் வீட்டில் யாரும் படிக்கவில்லை என்றாலும் நாங்கள் படிப்பதற்காகவே  வார/மாதப் பத்திரிக்கைகள் ஒன்று விடாமல் தருவித்த எங்களுடன் குடியிருந்த எங்கள் குடும்ப நண்பருக்கும்,  நான் எதிரே பார்க்காத நேரத்தில்  சுஜாதாவின் புத்தகங்களை பரிசாக தந்து என்னைத் திக்கு முக்காட செய்த நண்பருக்கும், இதை படிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



No comments:

Post a Comment