ரசம்....


(இது ஶ்ரீப்ரியா மையத்தில் சேருவதற்கு முன் நடந்தது)

இன்று காலை சுமார் ஏழு மணி அளவில்,  ஶ்ரீப்ரியாவினால்.....அதான் நம் நடிகை ஶ்ரீப்ரியா அவர்களினால் என் ரசம் குழம்பானது.

உங்களுக்கு ஶ்ரீப்ரியா அவர்களை  பிடிக்குமா என்று எனக்கு தெரியாது.  எனக்கு அவர் குரலும், அவரின் நகைச்சுவை உணர்வும் மிகவும் பிடிக்கும்.  ஶ்ரீப்ரியாவைப் ஏன் எனக்கு பிடிக்கும் என்ற  காரணத்தை பார்த்தாயிற்று.  இனி ரசம் குழம்பான கதையைப் பார்ப்போம்.  

ஶ்ரீப்ரியா அவரின் ட்விட்டர் பதிவுகள் எனக்கு பிடிக்கும். அவர் எப்பொழுதும் போல் பதிவு ஒன்றைப் போட......என் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நான் அதற்கு ஒரு காமெண்டைப் போட.....இங்கே தான் ஆரம்பமாகிறது நம் கதை.  காமெண்டைப் போட்டு விட்டு காலை வேலைகளில் நான் மூழ்கி நீந்திக் கொண்டிருக்க....சரியாக ஏழு மணி....ரசம் நுரைத்து வரும் சமயம்.....ஶ்ரீப்ரியா அவர்களிடம் இருந்து என் காமெண்டுக்கு பதில் காமெண்ட்.....ஒரே ஒரு சொல் தான்...அந்த ஒரே ஒரு சொல்லால் என் மனதை கவர்ந்தார்.   அவரிடமிருந்து காமெண்ட் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஒரே சிரிப்பு, மனதில் மத்தாப்பு, அவர் பால் மேலும் ஒரு ஈர்ப்பு.  எல்லா "பு"வும் சேர்ந்ததால் நுரைத்து வரும் ரசம் மறந்து போனது.  என் கணவரிடம் ஶ்ரீப்ரியா அவர்களின் காமெண்டை காமிக்கலாம் என்று நினைத்து போனால்...நிற்க.  என் கணவர் ஒரு on-call-gist..எப்பொழுது பார்த்தாலும் மீட்டிங், மீட்டிங் என்று ஃபோனிலேயே இருப்பார்.  நான் முக்கியமா, call முக்கியமா என்று பல முறை கேட்டிருக்கிறேன்.  இன்று வரை பதில் இல்லை. நம் கதைக்கு வருவோம்...காமெண்டை காண்பிக்க போனேனா...வழக்கம் போல் மீட்டிங்..மீட்டிங்....அவர் பக்கத்தில் போய் நின்றும் என்னை கண்டு கொள்ளவில்லை...உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் கணவா என்று மனதில் முனகிவிட்டு சமையல் அறைக்கு வந்தால்....என் ரசம் கொதித்து, வற்றி, குழம்பாக மாறிவிட்டது...

அந்த குழம்பான ரசத்தை எடுத்துவிட்டு,  வெண்டைக்காயை அடுப்பில் போட்டுவிட்டு..."மேடம் உங்களால் என் ரசம் இன்று குழம்பானது" என்று எழுத நினைத்தேன்....என் வெண்டைக்காய் கறி கருகுவதை நான் விரும்பவில்லை.  

No comments:

Post a Comment