சுஜாதா....

இது எந்த சுஜாதாவையும் பற்றியது அல்ல.  என்னைப் பற்றியது மட்டுமே.  அப்பொழுதைக்கு அப்பொழுது என்னைப் பற்றியும் நான் சிந்திக்கவேண்டும் அல்லவா?.  நீங்களும் உங்களைப் பற்றி, உங்களைப் பற்றி மட்டுமே அப்பொழுதைக்கு அப்பொழுது சிந்திக்க வேண்டும்.  ஆனால் இப்பொழுது  அதற்கான நேரம் அல்ல .   என்னைப் பற்றி.....இல்லை,இல்லை என் பெயரைப் பற்றி மட்டும் பார்க்கும் தருணம் இது.

சில வருடங்களுக்கு முன்பு, என் அப்பாவிடம் கூறும் தைரியம் இல்லாததால் என் அம்மாவிடம் கூறிய ஒன்று  நினைவில் வருகிறது.  என் அம்மா சமையல் அறையில் தீவிரமாய் செயல் பட்டுக் கொண்டிருந்த வேளையில்,  அவள் அருகில் போய் நின்றேன்.  என்ன என்பது போல் என் அம்மா என்னைப் பார்த்தாள்.

"அம்மா, உன் வாழ்க்கையிலேயே நீ உருப்படியா ஒண்ணு தான் பண்ணிருக்க," என்றேன்.  

என் அம்மா முகம் மலர்ந்தாள்.

"என்னடி?" என்றாள்.

"எனக்கு சுஜாதானு பேர் வைச்ச பாரு, அதோட உன் வாழ்க்கைல நீ உருப்படியா என்ன பண்ணிருக்க சொல்லு.."

என் அம்மா மிகவும் நல்லவள்.  என் பாராட்டுதலை அவள் ஏற்கவில்லை.  

"நான் பேர் வைக்கல.  சித்ரா தான் பேர் வைச்சா....அந்த கரண்டிய எடு..."

"ஏம்மா என் பேர பத்தி பேசிண்டு இருக்கேன்.  கரண்டியா முக்கியம்...." 

"எங்கயோ தண்ணி கொட்டற சத்தம் கேக்கறது....போய் பாரு...." என்று எனக்கு தண்ணி காட்டிவிட்டாள்.  

மேலே நடத்திய பேச்சு வார்த்தையிலிருந்து  என் பெயரில் மேல் எனக்கு தீராத காதல் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.  என்ன கண்ணை உருட்டுகிறீர்கள்?  உங்கள் பெயர் மேல் உங்களுக்கு ஆசை, காதல், மோகம் இல்லையா என்ன?  அதுவும் உங்கள்  பெயரை உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் கூப்பிடும் பொழுது....இன்பத் தேன் வந்து பாய்ந்திருக்குமே காதினிலே....எத்தனை முறை உங்களுக்கு தேன் வந்து பாய்ந்த இருக்கிறது......இப்பொழுது யோசிக்காதீர்கள்....இதை முழுவதும் படித்து முடித்தவுடன் நிதானமாய் யோசியுங்கள்.

அதில் பாருங்கள், சுஜாதா என்ற பெயர் இருந்தாலும், என்னை சுஜாதா என்று கூப்பிடுபவர்கள் மிகக் குறைவு.  சுஜா என்றும், சுஜி என்றும், சுஜ் என்றும் கூப்பிடுபவர்கள் தான் அதிகம்.  அமெரிக்கா வந்த புதிதில் "சுஹாதா" என்று என்று அமெரிக்கர்கள் அழைக்க ஆடிப் போனேன்.  "ஜா" வை "ஹா" என்று கூப்பிடும் ஸ்பானிஷ்  பழக்கம் என்னை நிலை குலையச் செய்தது.  அன்றிலிருந்து இன்று வரை என் பெயரை ஒழுங்காய் உச்சரிக்க அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படி சுஜா என்றும், சுஜி என்றும் என் பெயர் மறுவிய வேளையில் என் வாழ்வில் ஒரு திருப்பு முனை வந்தது.  திருப்பு முனைக்கு காரணம் பெண் அல்ல.  ஒரு ஆண்.   என் கணவர் அல்ல.  என் உறவு யாரும் அல்ல.  இது வேறு.  என் மேல் அவனுக்கு ஆசை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது, அவன் மேல் எனக்கு தீரா காதல்.  அதுவும் ஒவ்வொரு முறையும் "சுஜாதா" என்று என் பெயரை சொல்லி அழைக்கும் பொழுது, உச்சி முதல் உள்ளங்கால் வரை நான் சிலிர்த்துப் போவேன்.  அவன் கூப்பிடும் பொழுது என் பெயர் மிக அழகாக மிக மிக அழகாக தோன்றும்.  "இந்தியன்" படத்தில் வரும் பாடல் ஒன்றில் வரும் வரிகள் நினைவு இருக்கிறதா?

"உன் பேரை யாரும் சொல்லவும் விட மாட்டேன்...அந்த சுகத்தை தர மாட்டேன்....."

அந்த வரிகள் போல்..என் பெயரை அவனைத் தவிர யாரும் உச்சரிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.  என் பெயரை அவனை சொல்ல வைக்க நான் வழி கொண்ட முறைகள் அனேகம்.  "லப்டப்" இதயத்துடன் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து, வாயைத் திறந்து நான் பேச நினைத்த ஒரு சமயம்...."ஐ டோண்ட் லைக் யூ சுஜாதா....." என்றான்.  லப்டப் இதயம் அடிக்காமல் நின்று போனது.  என்ன ஏது என்று காரணம் கேட்பதற்குள் மீண்டும் ஒரு முறை......"ஐ  டோண்ட் லைக் யூ சுஜாதா...." என்றான்.  மனம் வருந்தி, கண்ணில் நீர் மல்கி, விம்மி அழுது....எதுவும் செய்யவில்லை நான்.  மாறாய் "பச்சக், பச்சக்" என்று கன்னத்தில் முத்தம் வைத்து கட்டி அணைத்துக் கொண்டேன்.  என் இறுக்கிய அணைப்பில் இருந்து, விடுவிடுவித்துக் கொண்டு ஓட்டமாய் ஒடி போனான்.  அவன் பின்னால் நான் தூரத்த.....அவன் ஓட....நான்கு வயது குழந்தை ஓடும் ஒட்டத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.  
அந்த நான்கு வயது குழந்தை அழைக்கும் "சுஜாதா"வில தான் என் உயிர் இருக்கிறது. என் தோழியின் குழந்தை.  எனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை.  ஆனாலும் அவன் என் பெயரைக் கூப்பிடும் பொழுது அவன் தான் எல்லாமாய் தோன்றுகிறது.

எனக்கு எத்தனை வயதானாலும், அவன் என்னை "சுஜாதா" என்று கூப்பிட வேண்டும் என்பது என் கட்டளை.  அதுவே என் சாசனம்......

(இனி நீங்கள் உங்கள் பெயரைப் பற்றி நினைத்துக் கொள்ளலாம்....)

சித்தி.....

(அன்னையர் தினம் அன்று சித்தியைப் பற்றி ஏன் எழுத வேண்டும்.  இது இரண்டாவது மனைவி சித்தியைப் பற்றி அல்ல.  சித்தப்பாவின் மனைவி சித்தி பற்றியது அல்ல.  அம்மாவின் தங்கையான சித்தியைப் பற்றியது.  ஒரு பெண்ணாய் நான் பல அவதாரங்கள்(மகள், தங்கை, மனைவி, அம்மா, மருமகள், அத்தை, மாமி, சித்தி(சித்தப்பாவின் மனைவி சித்தி), பெரியம்மா...)எடுத்தாலும், என் அக்காக்களின் குழந்தைகளுக்கு சித்தியாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்.  என் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதற்கு முன் என் அக்காக்களின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி விளையாடி களித்து இருக்கிறேன், (குழந்தை வளர்ப்பை பற்றி) கற்றும் இருக்கிறேன்.  இன்று அந்த குழந்தைகள் பெரிது பெரிதாய் வளர்ந்தன் பின்னும், "சித்தி" யாய் அவர்களுடன்  களித்த நினைவுகள் இன்றும் பசுமையாய் படர்ந்திருக்கிறது.  சித்தி என்பவள் இரண்டாவது அன்னையைப் போன்றவள். எல்லா உறவுகள் இருந்தாலும் என் குழந்தைகளுக்கு ஒரு சித்தி இல்லையே என்ற வருத்தம் எனக்கு மிக உண்டு..அதன் விளைவு தானே என்னவோ இந்த பதிவு.)

லண்டன் ஏர்ப்போர்ட்.   சென்னை செல்லும் விமானத்துக்கான"கேட்"டில் என் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தேன்.  அதே விமானத்தில் செல்வதற்காக அங்கே பல பேர் என்னைப் போல் காத்திருந்தார்கள்.  தமிழும், தெலுங்கும் மாறி மாறி என் காதில் விழுந்து கொண்டிருந்தது.  ஊர் விட்டு ஊரில், காதில் விழும் தமிழை ஆனந்தமாய் கேட்டுக் கொண்டிருக்கையில், என் பக்கத்து நாற்காலியில் ஒரு பெண் கையில் (பெண்) குழந்தையுடனும், முதுகில் பேக்பக்டுனும் வந்து அமர்ந்தாள்.  அவள் முகத்தை வைத்து தமிழா, தெலுங்கா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.  அந்த குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கலாம்.  அந்த பெணைப் பார்த்து புன்னகைக்க நினைக்கையில், அவள் பேக்பாகில் மும்மரமாய் எதோ தேடிக் கொண்டிருந்தாள்.  பிறகு புன்னகைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்ட நொடியில் ,"எக்ஸ்க்யூஸ் மி..." என்று என்னை ஆங்கிலத்தில் அழைத்தாள்.  அவள் ரெஸ்ட் ரூம் போய் விட்டு வரும் வரையில் அவள் பேக்பாக்கை பார்த்துக் கொள்ள ஆங்கிலத்தினல் வேண்டினாள் .  நானும் சரி என்று தலையசைத்தேன்.  அவள் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு அவளின் பேக்பாக்கை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அவள் சிறிது நேரத்தில் வந்தாள். "தேங்க் யூ..." என்றாள்.  நான் சிரித்து அந்த "தேங்யூ"வை ஏற்றுக் கொண்டேன்.  சிறிது நேரத்தில் என் மகன் என்னிடம் ஏதோ கேட்க, அதற்கு நான் பதிலளித்தேன்.

"நீங்க தமிழா..." என்றாள் அவள்.
 "ஆமாம்..."என்பது போல் தலையாட்டினேன்.
"சென்னை போறீங்களா...." என்றாள்.
 "ஆமாம்...நீங்களும் சென்னையா...." என்றேன்.
"ஆமாம்..." என்றாள்.   "சென்னைல எங்க இருக்கீங்க?"
சென்னையில் என் வீடு இருக்கும் இடத்தை சொன்னேன்.
"அங்கயா இருக்கீங்க.  என் தங்கை அங்க தான் காலேஜ் படிக்கறா..." என் வீட்டின் அருகில் இருக்கும் பிரபல கல்லூரியின் பேரை சொன்னாள்.

அதற்கு பின் ஏதோதோ பேசினோம். என் பெண் அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.  எங்கள் விமானத்திற்கான அழைப்பு வர, எல்லோரும் எழுந்து கொண்டோம்.  விமானத்தை அடைந்தோம்.  எங்கள் இருக்கையில் உட்கார்ந்த பிறகு அந்த பெண் எங்கிருக்கிறாள் என்று தேடினேன்.  கண்ணில் புலப்படவில்லை.  விமானம் புறப்பட்டது.  சற்று நேரத்திற்கெல்லாம் குளிர் பானம் வந்தது.  பின் உணவு வந்தது.  உணவு உண்டபின் விமானத்தின் விளக்குகள் அணைக்கபபட்டது.  என் பெண்ணும், பிள்ளையும் காதில் "ஹெட்ஃபோனை" பொறுத்திக் கொண்டு சீட்டுடன் இணைந்த டி.வி.யில் அவர்களுக்குப் பிடித்த படத்தை பார்க்க நானும் "ஹெட்ஃபோனை"பொறுத்திக் கொண்டேன்.  தமிழ் படம் ஒன்றை ஒடவிட்டேன்.  என் கண்கள் அதை பார்த்தது.  மனம் அந்த பெண்ணையும், அந்த குழந்தையையும், கல்லூரியில் படிக்கும் அந்த குழந்தையின் சித்தியையும் நினைக்கத் தொடங்கியது.

ஏனோ தெரியவில்லை, அம்மாவின் தங்கையான "சித்தி" என்கிற அழகான உறவைப் பற்றி பெரிய ப்ரஸ்தாபம் எங்கும் இல்லை.  பாட்டியையும், தாத்தாவையும், மாமாவையும், அத்தையையும் கொண்டாடும் தமிழ் உலகம் "சித்தி"யைக் கொண்டாடுவதில்லை.  இரண்டாம் தாரமான "சித்தி"யை கொடுமையாக சித்தரிக்கும் கதைகளும், நிஜங்களும், அம்மாவின் தங்கையான "சித்தி"யைப் பற்றி பேசுவது இல்லை.

ஒரு பெண்ணிற்கு  குழந்தை பிறந்து, அவள் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள்.  புதிதாய் பிறந்த குழந்தைக்கு அந்த வீட்டில் எத்தனை உறவுகள்..பாட்டி, தாத்தா, மாமா, மாமி, பெரியம்மா, பெரியப்பா,சித்தி.....அப்பப்பா.....இது அந்த குழந்தையின் அம்மா வழி சொந்தம் என்றால், அந்த குழந்தையின் அப்பா வழியிலும் அனேக சொந்தங்கள்....பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி.......

இதில் என்ன வேடிக்கை என்றால், குழந்தை பேச தொடங்கும் போது "அம்மா சொல்லு...", "அப்பா சொல்லு...." "அத்தை சொல்லு...." "மாமா சொல்லு....." "பாட்டி சொல்லு..." "தாத்தா சொல்லு....." என்று எல்லா உறவுகளையும் சொல்லித் தருவார்களே தவிர, "சித்தி சொல்லு...." என்று யாரும் சொல்லி தருவதில்லை.  அந்த "சித்தி" என்பவள் தான் அந்த குழந்தையின் உற்ற துணையாய் இருப்பவள்.

பாட்டி என்பவள் பத்திய சாப்பாட்டிலும், குழந்தை குளியலிலும் தன்னை தொலைத்திருப்பாள்.   தாத்தா அலுவலக வேலையிலும், அரசியலிலும் கவனம் செலுத்திய பின் கிடைக்கும் நேரத்தில் குழந்தையை கொஞ்சுவார்.  பெரியம்மா வேறு ஒரு வீட்டில் தன் குடும்பத்தை கவனித்த நேரம் போக இந்த குழந்தையை பார்த்து விட்டு செல்வார்.  மாமா என்பவர் சிறுவனாய் இருந்தால் தன் நண்பர்களுடன் கழித்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் குழந்தையை எட்டிப் பார்ப்பான்.  இதுவே மாமா பெரியவராக இருந்தால் குழந்தையை கொஞ்ச மாமியின் அனுமதிக்காக காத்திருப்பார்.  மாமி என்பவள் அடுத்த வீட்டு பெண்.  ஒன்றும் சொல்வதற்கில்லை.  குழந்தையின் அம்மாவோ சதா சர்வ காலமும் பாலூட்டுவதும், துணி(டயாபர்) மாற்றுவதும், தூங்குவதுமாய் இருப்பாள். இதில் குழந்தைக்கு மற்றுமொரு தாயாய், தோழியாய் இருப்பவள் சித்தி தான்.  அந்த "சித்தி" பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருப்பாள்.  இல்லை என்றால் வேலைக்கு செல்பவளாய் இருப்பாள்.  அழகான பருவம்.  வீட்டில் பெரியதாக வேலையோ பொறுப்போ இருக்கப் போவதில்லை அவளுக்கு.  அப்படியே இருந்தாலும் அக்காவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவள் உலகம் மாறி போகும்.  அவள் உலகத்தில் அந்த குழந்தைக்கு தான் முதல் இடம்.  ஏதோ அவள் அக்கா அவளுக்காகவே குழந்தை பெற்றது போல் அந்த குழந்தையை கொஞ்சுவதும், அந்த குழந்தையுடன் விளையாடுவதிலும் அவள் மனம் மகிழ்ந்து போகும்.  அவள் மனம் மட்டுமா மகிழும்? அம்மாவைப் போல் இன்னொருவர் நம் மேல் அன்பை பொழிந்து,  அரவணைத்து விளையாடுவதற்கு இருக்கிறாள்  என்று குழந்தையும் மகிழந்து போகலாம்.  ஏன் குழந்தையின் அம்மாவிற்கும் மனம் மகிழும் தான்.  தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக தன்னைப் போலவே குழந்தையைப் பார்த்துக் கொள்ள தங்கை இருக்கிறாள் என்பது பெரிய வரம்.


இந்த சித்திக்கு போட்டியாக வருபவர் குழந்தையின் தாய் மாமாவும், அத்தையும் தான்.  மாமாவின் நிலையை முன்னரே பார்த்தோம்.  அத்தையைப் பார்ப்போம்.  குழந்தையின் அப்பாவின் அக்கா/தங்கையான அத்தை என்பவளுக்கு அனேகமாக திருமணம் முடிந்து குடும்பத்துடன் இருப்பாள்.  திருமணம் ஆகவில்லை என்றால் முதலில் அண்ணன் அவர்களுடன் இருக்கவேண்டும்.  அண்ணிக்கும் அவளுக்கும் உறவு முறை நன்றாய் இருத்தல் வேண்டும்.  இதெல்லாம் சரியாக இருந்தால் அந்த குழந்தையுடன் அத்தை ஒட்டிக் கொள்வாள்.  இல்லை என்றால் அந்த குழந்தைக்கு அத்தை என்பவள் தொலை தூர தொடர்பு தான்.  எந்த வித தொடர்பாக இருந்தாலும், சித்தி வளர்த்த குழந்தையை தான் அத்தை வளர்ப்பாள்.

இந்த நினைவுகள் சென்னை வரை துணை வந்தது.  சென்னையில் தரை இறங்கி, "கஸ்ட்ம்ஸ்" "இமிக்ரேஷன்"எல்லாவற்றையும் முடித்து, பெட்டிகளை"கன்வெயர் பேல்ட்"  லிருந்து எடுத்துக் கொண்டிருக்கையில் அந்த பெண் கையில் குழந்தையுடன் பெட்டிகளை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது தெரிந்தது.  அவளுடைய பெட்டிகளை என் மகன் எடுத்துக் கொடுத்தான்.  பின்னர், என் "கார்ட்"டை மகனிடம் தள்ள சொல்லிவிட்டு, அவள் "கார்ட்"டை நான் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தேன்.

 வெளியே வந்தோம். இருள் பிரியாத விடியற் காலை நேரம். கூட்டமாய் மக்கள் தங்கள் உறவுகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தனர்.

"உங்க வீட்டுலேந்து யாராவது வந்திருக்காங்களா?" அவளை கேட்டேன்.

"அதோ எங்க அப்பாவும், தங்கையும் வந்திருக்காங்க,"  என்று அவர்கள் நின்று கொண்டிருந்த திசையில் கை காட்டினாள்.  எங்களைப் பார்த்தற்கு அடையாளமாக அவள் அப்பா கையசைத்தார். இதற்குள் என் மகன், கார்ட்டுடனும் என் மகளுடனும் எங்களுக்காக வந்திருந்த எங்கள் குடும்ப்பத்தினரிடம் சென்றுவிட்டான்.

அவள் அப்பாவும், தங்கையும் இருக்கும் இடம் நோக்கி நாங்கள் செல்ல, அவள் குழந்தை திடீரென்று சந்தோஷ கூச்சலிட்டு அவள் கையிலேயே குதிக்க  தொடங்கியது.  நான் அந்த குழந்தையைப் பார்க்க,

"என் தங்கைய பாத்து தான் கத்தறா," என்று முகத்தில் பெருமை பொங்க கூறினாள் அந்த பெண்.  அவர்கள் பக்கத்தில் சென்றவுடன்  குழந்தை பெரிதாய் சிரித்துக் கொண்டு  ஒரே தாவலாய் அந்த தங்கையிடம்  தாவியது.  தாவிய குழந்தைக்கு ஆயிரம் முத்தங்களை அந்த பெண் கொடுக்க, அந்த காட்சியை நானும், அந்த குழந்தையின் அம்மாவும், குழந்தையின் தாத்தாவும் மெய் மறந்து ரசித்தோம்.  அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு என் குடும்பத்தை நோக்கி நடந்தேன்.   ஏதோ ஒரு உந்துதலின் பின்னால் திரும்பி பார்க்க, அந்த குழந்தை அதன் அம்மாவிடமும் , தாத்தாவிடமும் போக மறுத்து, "சித்தி"யை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.

சித்தி இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். அக்கா இருக்கும் தங்கைகளும் தான்.

நீயா நானா

 இந்தப் புகைப்படம், இந்த பதிவின் தலைப்பு எல்லாவற்றையும் பார்த்ததுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்....திரு. கோபிநாத் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார் என்றும்,  இங்கு "நீயா, நானா" நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும்.....ஆனால் அதில் நான் கலந்து கொண்டேன் (அஹம்.....அஹம்....).என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என் வாழ்க்கையில் மைக் பிடித்து பேசிய அனுபவம் இருந்தாலும், பட்டிமன்றம் போன்று ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.  அப்படி இருக்கையில் நீயா நானாவில் எந்த தைரியத்தில் கலந்து கொண்டேன் என்று கேட்பவர்களுக்கு.....நீயா நானா அடிக்கடி பார்த்ததில்,  திரு. கோபிநாத் அவர்கள் மிகவும் தெரிந்தவர் ஆகிவிட்ட படியால், தெரிந்தவருடன் பேச என்ன தயக்கம் என்று முன் பின் யோசிக்காமல் கலந்து கொண்டு விட்டேன்.

முதல் படி கலந்து கொள்வது.  இரண்டாவது படி- கொடுத்த தலைப்பிற்கு  (தலைப்பு:  அமெரிக்க வாழ்க்கையில் அதிகம் அவதிப்படுவது பெற்றோர்களா? பிள்ளைகளா?  நான் பெற்றோர் பக்கம் எடுத்துக் கொண்டேன்) நம்மை தயார் செய்து கொள்வது.  ஆறறிவு உள்ள எவரும் செய்யும் செயல் இது.  எனக்கு கூடுதலாய் ஒரு அறிவு இருக்கிறது. ஏழாம் அறிவு....யூஸ்லெஸ் அறிவு.  அது என்னை தயார் செய்ய விடாமல் தாறுமாறாய் கேலி செய்து கொண்டிருந்தது.."நீயா நானாக்கு ப்ரிப்பேர் பண்ணிண்டு போற.  இவ்ளோ நாளா எழுதற உனக்கு பேச தெரியாதா...." எழுதுகிற பலருக்கு பேச தெரிந்திருக்கும்.  எனக்கு பேச தெரியாது என்று என் ஏழாம் அறிவுக்கு தெரியவில்லை.  அது சீண்டியதின் பெயரில், கொடுத்த தலைப்பைப் பற்றி சிந்திக்காமல் இருந்துவிட்டேன். 

அந்த நாளும் வந்தது.  வாஷிங்க்டன் டி.சி. தமிழ் சங்கம் நடத்திய் சித்திரை திருவிழாவின் ஒரு அங்கம்  "நீயா, நானா."   தோழிகளுடன் backstageஇல் உட்கார்ந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, திரு.கோபிநாத் அவர்கள் எந்த வித ஆராவரமும் இல்லாமல் மிக அமைதியாக வந்தார்.  "கேக்கறவன் கேனையா இருந்தா கோட்டு போட்டவன் எல்லாம் கோபிநாத்துனு சொல்லிடுவீங்க" என்ற சொல்லை பொய்யாக்கும் வகையில் அவரின் அடையாளமான "கோட்" இல்லாமல் வந்தார். "celebrity" என்ற பந்தா இல்லாமல்,   ஏதோ ரொம்ப நாள் பழகிய மனிதர் போல் சகஜமாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  அங்கிருந்தவர்கள் திரு.கோபிநாத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க நான் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை.  காரணம்...கொழுப்பு, திமிர், அகங்காரம்....என்ன வேண்டுமானாலும் பெயர் சூட்டிக் கொள்ளலாம்.  நாம் என்ன அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது, அவர் நம்மை தேடி வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.....(அதான் சொன்னேனே......கொழுப்பு, திமிர், அகங்காரம்) என்று விட்டுவிட்டேன்.  பின் ஒவ்வொருவராய் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பற்றி சொல்ல, peer pressure ஆகிவிட்டது.  எனக்கு தோதாக திரு. கோபிநாத் அவர்களும் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க,  புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  எடுத்த புகைப்படம் வெளிச்சம் இல்லாமல் கருப்பாய் இருப்பதைப் பற்றி கவலைப் படாமல் இருந்த நான், facebookல் மற்றவர்கள் திரு. கோபிநாத்துடன் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டேன்.  அவர்கள் புகைப்படங்கள் எல்லாம் பளிச்சென்று இருக்க, என் புகைப்படம் மட்டும் கருப்பாய்.... நமக்கு புகைப்படம் எடுக்க கிடைத்தது ஒரு celebrity....அதுவும் இப்படி....சரி விடுங்கள்....அடுத்த முறை திரு. கோபிநாத் வரும் பொழுது ஆயிரம் வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்.  கதைக்கு வருவோம்.  

மேடை நீயா நானவிற்கு தயாராகிக் கொண்டிருந்ததது.  இரண்டு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டு இரண்டு அணியில் பங்கு பெறுபவர்களும் உட்கார்ந்து  பேசிக் கொண்டிருக்க, திரு. கோபிநாத் அவர்கள் backstageஇல் அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  இந்த புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்று அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.  ஒரு வழியாக மேடை தயாராக, திரு. கோபிநாத் அவர்கள் மேடைக்கு வந்தார். திரை மெல்ல விலக, திரு. கோபிநாத்தைக் கண்டவுடன், மேடையில் கீழ் அமர்ந்திருந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைத்தட்டி ஆரவாரக் கூச்சலிட்டனர்.  அவர்கள் அமைதியான பின் திரு. கோபிநாத் அவர்கள் பேச தொடங்கினார்.  அவர் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் சிரிப்பொலி காதை பிளந்தது.  அன்று  மக்களை சிரிக்க வைப்பதையே அவர் நோக்கமாக கொண்டிருந்தார் போலும்.  அதுவும் சரிதான்.  எல்லா வேலையும் விட்டுவிட்டு ஒரு ஞாயிறு மாலைப் பொழதை கழிக்க மக்கள் வந்திருக்கும் போது அவர்களை சிரிக்க வைப்பதை விட வேறு  எது செய்தாலும் அது சரியாக இருந்திருக்காது.  

சந்திரமுகி படத்தில்   "கங்கா சந்திரமுகியாக மாறினாள்" என்று ஒரு வசனம் வரும்.  அதே போல் அமைதியாக இருந்த திரு. கோபிநாத் "நீயா நானா" கோபிநாத் ஆக மாறியதை நாங்கள் எல்லாம் கண்டோம்.   என்ன பேச்சு, என்ன பேச்சு.....கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராய் பேச, அவர்களின் பேச்சை பொய்யாக்கும் விதத்தில், நகைச்சுவை கலந்து திரு. கோபிநாத்  எதிர்த்துப் பேச, வந்திருந்த மக்களுக்கு சிரிப்போ சிரிப்பு....கலந்து கொண்டவர்களுக்கு சிரிப்புடன் கூட  பல்போ...பல்பு... தட்டுத் தடுமாறி எனக்கு பேச வாய்ப்புக் கிடைத்தபோது, மைக் ஒழுங்காக பிடித்துக் கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு கிண்டல்....பிறகு நான் பேசி முடித்ததும்.....மொத்தமாக whack-a-mole போல் அடித்து நொறுக்கி விட்டார்.   அதை நினைத்து மனதிற்குள் விழுந்து விழுந்து சிரித்தது வேறு விஷயம்.  இப்படியாக எல்லோரையும் அவர் counter attack பண்ணிக் கொண்டிருக்க, நான் என் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருக்க....திடீரென்று "சுஜாதா..." என்று அவர் சொல்ல....என்னை அவருக்கு தெரிந்திருக்கிறதே என்று சந்தோஷமாக வானில் இறக்கை விரித்துப் பறக்க நினைக்கையில் தான் தெரிந்தது, அவர் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி ஏதோ கூறினார் என்று....கவுத்துட்டியே தலைவா....

இந்த முறை பல்பு வாங்கினோம், இரண்டாவது முறை பல்பு வாங்கக் கூடாது என்று தீவிரமாக நான் தீர்மானித்த நிலையில், நேரமின்மை காரணமாக நீயா நானா அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது.   ஆக நான் பேசினது ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ மட்டும் தான்.  இப்படி இருக்கையில் நான் என்ன செய்து இருக்க வேண்டும்...இந்த (வெளிச்சமில்லா) புகைப்படத்தை யாருக்கும் அனுப்பி இருக்கக் கூடாது.  அப்படி செய்யாமல் என் உறவுக்கும், நட்புக்கும் அனுப்ப....அவர்கள் எல்லோரும் நீயா, நானாவில் நான் பேசி கலக்கியதாய் நினைத்துக் கொண்டு....வீடியோ ரெக்கார்ட்டிங் கேட்க....சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டேன்.....இந்த ஒரு நிமிடம் பேசியதற்கு இவ்வளவு பெரிய பதிவா....என்று கேட்பார்களுக்கு....ஹி.....ஹி.....ஹி.......

இந்த வாரம் ஞாயிறு அன்று தொலைக்காட்சியில்  நடைப்பெற்ற நீயா நானாவைப் பார்க்கலாம் என்று நேற்று ,தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, திரு. கோபிநாத் அவர்களைப் பார்த்ததும் நான் வாயடைத்துப் போனேன்.  இவரையா நாம் பார்த்தோம், இவருடனா பேசினோம்,  இவருடனா நீயா நானாவில் கலந்து கொண்டு பல்பு வாங்கினோம்.......மகிழ்ச்சி பிரவாகமாக ஓட......இதில் ஒரு நொடி பேசினால் என்ன, ஒரு நிமிடம் பேசினால் என்ன, ஒரு மணி நேரம் பேசினால் என்ன....கேட்டவர்களுக்கு விரைவில் வீடியோ அனுப்பி வைக்கப்படும்.