வண்ணான் (சிறுகதை)

ஆதித்யன் இன்னும் எழாத விடியற்காலை பொழுதில் ஸ்வாமி ராமானுஜர் வடதிருக்காவேரியில் (கொள்ளிடம்) நீராட்டத்தை முடித்தார்.  பன்னிரெண்டு இடங்களில் திருமண் காப்பு தரித்து கொண்டார். பின்னர் காஷாயம் உடுத்தி, கையில் திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார்.  அங்கு கரையில் காத்திருந்த சிஷ்யர் பிள்ளை உறங்காவில்லி தாசர் கரம் நீட்ட, நீட்டிய கரத்தை பற்றியபடி ஸ்வாமி மெல்ல கரையேறினார்.  அங்கு காத்துக் கொண்டிருந்த மற்றொரு சிஷ்யரான முதலியாண்டானுடன் திருவரங்கம் கோவிலை நோக்கி நடக்கத் துவங்கினார்.


அப்பொழுது திருவரங்கனின் வஸ்திரங்களை துவைக்கும் வண்ணான் ஒருவன் பெரிய பிரம்பு கூடை ஒன்றை தூக்கியபடி காவிரியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.  தூரத்தில் ஸ்வாமி ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வருவதை கண்டான்.  எப்பொழுது ராமானுஜரை கண்டாலும் பரவசமாவன்.  அவருடன் ஏதாவது பேசுவான்.  இன்றும் அவரை கண்டவுடன்  பரவசமானான்.  வேக வேகமாக நடந்தான்.  ஸ்வாமியின் அருகில் வந்தான்.  கையில் இருந்த பிரம்பு கூடையை கீழே வைத்தான்.  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை நமஸ்கரித்தான்.  ராமானுஜர் பதறினார்.


"எழுந்திரு வரதா," என்றார்.   வரதன் என்ற பெயர் கொண்ட வண்ணான் எழுந்திருந்தான்.


அந்த பிரம்புக் கூடையைப் பார்த்தார்  ராமானுஜர். உள்ளே மஞ்சள் நிறத்தில் அரங்கனின் வஸ்த்திரங்கள். பிரம்பு கூடையைப் பார்த்து கைகூவித்தார் ராமானுஜர்.


"பொழுது புலரும் முன்னரே  அரங்கனின் வஸ்திரங்களை துவைக்க வந்துவிட்டாயா?"


"ஆமாம் சாமி,"


"வெய்யில் வந்த பிறகு வந்திருக்கலாமே.  காவிரி இன்று சற்று குளிர்வாக இருக்கிறாள்."


" நம்ம ரங்கன் குழந்தை மாதிரி சாமி.  அவனுக்கு எல்லாம் பாத்து பாத்து தான்  செய்யணும். வெய்யில் வரதுக்கு முன்னாடி அவன் வஸ்த்திரங்கள  தோய்க்கணும்.     வண்ணான் குடிக்கு போய் எல்லாத்தையும் இளம் வெய்யில்ல நல்ல பதமா  காயவைக்கணும்.  உச்சி வெய்யில்ல காய வைச்சா வஸ்த்திரம்லாம் மொட மொடனு ஆயிடும். அவனோட உடம்புக்கு அந்த மாதிரி மொட மொட துணியெல்லாம் ஒத்துக்காது. அப்புறம் எல்லாத்தையும்  நல்ல அழகா மடிச்சு கோவில் பட்டர் கிட்ட குடுத்துட்டா அப்புறம அவர் பாத்துப்பார்.."


"என்ன பரிவு, என்ன பரிவு?"  ராமானுஜர் கூறினார்.  "அரங்கனுக்காக பரியும் உன்னைப் போல் ஒரு வண்ணாணானை பிற்க்காமல் போனேனே." அவர் கண்களில் நீர் வழிந்தோடியது.


ராமானுஜரின் கண்களில் கண்ணீரை கண்ட வரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பிரம்புக் கூடையை தூக்கிக் கொண்டான்.  "நான் போயிட்டு வரேன் சாமி."  ராமானுஜர் தலையாட்ட, விடைபெற்று போனான்.


இந்த வண்ணானை நினைத்தபடியே திருவரங்கம் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்த ராமானுஜரின் மனதில் மற்றொரு வண்ணானின் நினைவு வந்தது.


"கண்ணா, எங்கள் உடைகளைப் பார்...." சொன்னான் பகவான் கண்ணனின் நண்பன் ஒருவன்.  கம்சனைக் காண தன் நண்பர்களோடும், அண்ணா பலராமனோடும் மதுரா நகரத்திற்கு வந்திருந்தான் கண்ணன்.

 "நீ கூப்பிட்டாய் என்ற ஒரே காரணத்திற்காக மாடு மேய்க்கும் உடைகளுடனே கம்சனை காண வந்துவிட்டோம்.  இந்த உடைகளுடன் அரண்மனைக்கு செல்ல கூச்சமாக இருக்கிறது.  எங்களுக்கு வேறு நல்ல உடைகளுக்கு ஏற்பாடு செய் கண்ணா."


"யமுனைக் கரையில் வண்ணான்கள் இருப்பார்கள்.  அவர்களிடம் சென்று உடைகள் கேட்கலாம் வாருங்கள்."  

யமுனைக்கரைக்கு அவர்கள் வந்த போது வண்ணான் ஒருவன் துணிகளுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தான்.  அவனிடம் சென்றான் கண்ணன்.


"ஐயா, கம்சனின் மருமகன் நான். அவரைக் காண சென்று கொண்டிருக்கிறோம்.  எங்களுக்கு நல்ல உடைகள் இருந்தால் தாருங்கள்.  கம்சனைப் பார்த்து விட்டு போகும் போது திருப்பி கொடுத்து விடுகிறோம்."


கம்சனின் வண்ணான் அவன்.  கண்ணணைப் பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டான்.


கண்ணன் மீண்டும் கேட்டான்.  "நான் சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா? நல்ல உடைகள் இருந்தால் எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்."


வண்ணான் கோவம் கொண்டான்.  " நீ ஒரு இடையன்.  எப்பொழுதும் அழுக்கு உடைகளை அணிந்து கொள்பவன். உனக்கு புது உடை, பட்டாடை எல்லாம் வேண்டுமா?  என் கண்னில் படாமல் ஒடிவிடு.  இல்லை என்றால் உன் கம்ச மாமா உன்னை என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அதை நான் செய்து விடுவேன்.  ஜாக்கிரதை."


"கண்ணா, இவன் பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  உன் கைவரிசையை இவனிடம் காட்டு," சொன்னான் கண்ணனின் நண்பன் ஒருவன்.


"அப்படியா சேதி.  என் கை வரிசையை முதலில் பாருங்கள்," கோவத்துடன் வண்ணான், கண்ணனை தாக்குவதற்கு கையை ஓங்கினான்.

ஓங்கிய கையை மரித்தான் கண்ணன்.  "இனி உனக்கும், உன் குலத்திற்கும் மன்னிப்பு கிடையாது....." என்று சொல்லி  அவன் தலையைத் தட்ட, வண்ணானின் தலை துண்டித்து கீழே விழுந்தது.


"அரங்கா...." ராமானுஜர் மானசீகமாக அரங்கனைக் கூப்பிட்டார்.   "அன்று அந்த வண்ணானின் செயலால் கோவம் கொண்டு அவன் குலத்தையே மன்னிக்காமல் விட்டு விட்டாய்.  இன்று இந்த வண்ணானைப் பார்த்தாயா.  உன் மேல் எத்துணை பரிவு, பாசம்?  அவன் பார்த்து பார்த்து சலவை செய்த வஸ்த்ரங்களை அணிந்து நீ சந்தோஷப் படவில்லையா?  இவனுக்காக,  வண்ணான் குலத்தை மன்னித்து விடு.  நீ மன்னிக்காவிட்டால் அவர்கள் குலம் பரிமளிக்காது...."


வடதிருக்காவிரியில் அரங்கனின் வஸ்த்திரங்களை துவைத்துக் கொண்டிருந்த வண்ணானை குளிர் காற்று ஒன்று தழுவிச் சென்றது.

No comments:

Post a Comment