திருப்புல்லாணியும், தனுஷ்கோடியும்

ராமரை உணர்ந்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் ஒரு முறை திருப்புல்லாணியும், சேது சமுத்திரமும், தனுஷ்கோடியும் சென்று வாருங்கள்.   ராமரைக் கட்டாயமாக உணரலாம்.

இரண்டு வருடங்கள் முன் திருப்புல்லாணி செல்வதற்காக இராமநாதபுரம் புகை வண்டி நிலையத்தில் (குடும்பத்தோடு) இறங்கிய போது,  தமிழ் நாட்டில் மற்றும் ஒரு ஊரைப் பார்க்க போகிறோம் என்ற எண்ணம் இருந்ததே தவிர , ராமரை உணரப் போகிறோம் என்றோ, அங்கு இருக்கும் அதிசயங்களை காணப் போகிறோம் என்றோ துளியும் தெரிந்திருக்கவில்லை.

இராமநாதபுரத்திலிருந்து கார் பயணத்தில் திருப்புல்லாணியை அடைந்த எங்களை முகமுன் கூறி வரவேற்றது மயில்கள்-  நாங்கள் கண்ட முதல் அதிசயம்.   பாரதியார் மட்டும் இன்று  இங்கு வசித்திருந்தால் "காக்கை, மயில் எங்கள் ஜாதி" என்று பாடியிருப்பார். திருப்புல்லாணியில் பார்க்கும் இடத்தில் எல்லாம் மயில்கள்.  வீட்டுக் கூரைகள் மேல், வீடுகளின் கொல்லைப் புறத்தில், தெருக்களில் என எல்லா இடத்திலும் மயில்கள்.   மயில்களின் அகவல் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.  அன்னியரைக் கண்டு பயந்து ஒடினாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது தோகை விரித்து ஆடி நம்மை சிலிர்க்க வைக்கிறது. ஆங்காங்கே மயில்களின் இறகுகள் கீழே விழுந்திருந்தாலும்  ஒரு மயில் இறகைக் கூட நம்மால் எடுத்து செல்ல முடியாது.  காரணம் மயில் நம் தேசியப் பறவை . இறகை எடுத்து வந்தால் கடத்தல் குற்றத்திற்கு ஆளாக்கப் படுவோம்.   

மயில்களின் அகவலைக் கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும்  ஆதி ஜெகநாதர் ஆலயத்துக்குள் போனால், அங்கே  மேலும் ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன.
ராமரை சேவிப்போம் என்று  ராமர் சன்னிதியை அடைந்தால், அங்கு வில், அம்புடன் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் ராமரைக் காணவில்லை.  மாறாக சயன திருக்கோலத்தில் படுத்திருக்கும் ராமர் சேவை சாதிக்கிறார். ( சீதையை மீட்பதற்காக இலங்கை செல்ல சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு காத்திருந்த போது,  தர்ப்பை புல்லின் மேல் சயனித்திருந்தார்.  அதன் அடிப்படையில் ஆதிசேஷன் மேல் தர்ப்பை புல் விரித்து சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.)  அடுத்த அதிசயம் எப்பொழுதும்  ராமருடன் இருக்கும் சீதை அங்கு இல்லை. சீதையை  மீட்பதற்கும் முன் இங்கு வந்த ராமர் ஆதலால் சீதை இல்லை.  மூன்றாவது அதிசயம் அனுமார்.  எங்கும் எப்பொழுதும் கைக்குவித்து கனிவாக காட்சி அளிக்கும் அனுமார், இங்கு  சிரம் தாழ்த்தி, வாய் புதைத்து விபீஷணனுக்கு சரணாகதி அருள வேண்டும் என்று வேண்டி நிற்கிறார்.  ராமாயணம் மனதில் அரங்கேற ஆரம்பித்தது.  ராமர் மனதின் ஓரத்தில் குடிபுகுந்தார்.

புதிதாய் குடிபுகுந்த ராமருடன், சேதுகரை வந்தடைந்தோம்.  நாங்கள் போன அன்று அம்மாவாசை தினம் ஆனபடியால் மக்கள் கூட்டம்.  அம்மாவாசை தினம் அன்று சேதுகரையில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது உகந்தது என்பதால் இந்திய நாட்டின் பல்வேறு மூலையிலிருந்து திரண்டு வந்திருந்தது  கூட்டம். சலசலப்பான  மக்கள் கூட்டத்தின் ஊடே தொலைவில் தெரிந்தது சேது சமுத்திரம்.  அலை இல்லா சமுத்திரம்.  நதி போல் சாந்தமாய் இருந்தது.

சமுத்திரத்தை நோக்கி நடந்தோம்.  சமுத்திரக் கரையில் ஆங்காங்கே மக்கள்,  புரோகிதர்களின் உதவியுடன் தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்கள். இங்கு யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.  பெரியவர், சிறியவர், ஆண், பெண், பறவை, விலங்கு, எதிரி, நண்பன் யாராக இருந்தாலும் வேறுபாடின்றி தர்ப்பணம் செய்யலாம்.   புரோகிதர்கள் மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்லி முடித்த பின், அதை தமிழில் விளக்குகிறார்கள்.  செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கும் அர்த்தம் தருகிறார்கள்.  தர்ப்பண மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கேட்க,   மனம் கரைந்து கண்களில் நீர் எட்டிப் பார்க்கிறது.

மனதை மாற்றி சமுத்திரத்தைப் பார்த்தால், சமுத்திரம் அலையின்றி  அமைதியாய் ராமரைப் போல் இருந்தது.  ராமர் உதாரணம் வந்தது ஏன்?  மனம் கேள்வி கேட்டது. இங்கு ராமரின் நினைவு வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.  இங்கு தானே  விபீஷண சரணாகதி நடைபெற்றது,  இந்த சமுத்திரத்தை தானே ராமர் வேண்டினார்.  மீண்டும் ராம காதை மனதுள் அரங்கேறியது.  இப்பொழுது  ராமர் முழு மனதையும் ஆக்கிரமத்துக் கொண்டார். அருகில் இருந்த புரோகிதர் "சமுத்திரராஜா" என்று தொடங்கும் மந்திரத்தை சொல்ல, "என்னையா கூப்பிட்டாய், இதோ வந்தேன் பார்," என்று ஒரு சின்ன அலை வந்து காலை தொட்டுச் சென்றது.  அலை இல்லாத சமுத்திரம், தன் பெயரைக் கூப்பிட்டவுடன் சின்ன அலையாய் தோன்றி தன் இருப்பைக் காட்டிக் கொடுத்தது வியப்பாய் இருந்தது.

சமுத்திரம் அருகே அனுமார் கோவில் ஒன்று உள்ளது.  அங்குஅனுமாரை தரிசிக்கும் போது தெரிந்திருக்கவில்லை, இனி இந்த ஊரை விட்டுச் செல்லும் வரை எண்ணில் அடங்கா அனுமார்  கோயில்களை காண்போம் என்று.  பார்க்கும் இடங்களில் எல்லாம் அனுமார் கோவில்கள் சின்னதும், பெரிதுமாக. அப்பப்பா…. பிரமிப்பு, ஆச்சரியம்.

சரி, சேதுகரையுடன் முடிந்ததா ஆச்சரியங்களும்/அதிசயங்களும்  என்றால் இல்லை.  தனுஷ்கோடி காத்திருந்தது எங்களுக்காக.
"கடலால் மூழ்கடிக்கப் பட்ட நகரம்" என்ற பெயருடன் விளங்கும் ஊருக்கு வேனில் பயணம்.  தார் சாலை முடிந்து மண் சாலையில் ஏறி இறங்கி, ஏறி இறங்கி,  ஓடியது வண்டி.  எக்கச்சக்கமான ஏற்ற இறக்கங்களுக்கு பின்  தனுஷ்கோடி அடைந்தோம்.  வேனில் இருந்து இறங்கியவுடன் காட்சி அளிக்கிறது, 1964ஆம் ஆண்டு அடித்த புயலால் சேதமடைந்த  கட்டிடங்கள். கட்டிடங்கள் புதுப்பிக்க படாமல் புதுப்பிக்க படவில்லை.    "வாழ தகுதியற்ற இடம்" என்று அரசு கூறிய பிறகும்,  இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறது அங்குள்ள மீனவ குடும்பங்கள்.  புயல் தாக்கி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்றும் சோகத்தை சொல்கிறது  தனுஷ்கோடி.  ஆச்சரியத்துடனும், சோகத்துடனும் அங்கிருந்து மீண்டும் வேனில் பயணம், தனுஷ்கோடியின் வேறு பக்கத்தை பார்ப்பதற்கு.
மீண்டும் மண் சாலை பயணம்.  அதே ஏற்றம், அதே இறக்கம்.  ஒரு வழியாக வேன் நின்றது.  வேனிலிருந்து இறங்கினால், எங்களுக்கு சிறிது தொலைவில் சமுத்திரம்.  எங்களுக்கு பின்னால் மிக தொலைவில் சமுத்திரம்.  வலது பக்கம் சமுத்திரம். எங்களைச் சுற்றி  சமுத்திரம்.  வியப்பு, ஆச்சரியம்.  அதிலும் ஒரு பாதி சமுத்திரம் பச்சை  நிறத்துடன் அமைதியாய் காட்சி அளிக்கிறது,  மற்றும் ஒரு பாதி நீல நிறத்துடனும் ஆரவாரத்துடனும் காட்சி தருகிறது.  பச்சை நிறத்துடன் காட்சி அளிப்பது வங்கக் கடல், நீல நிறத்துடன் காட்சி அளிப்பது இந்திய பெருங்கடல்.  இவை இரண்டும் சங்கமிக்கும் இடம் தான் தனுஷ்கோடி.  தனுஷ்கோடிக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது.   சீதையை மீட்பதற்காக
  ராமர் அமைத்த பாலம் தொடங்குவது தனுஷ்கோடியில் தான்.  முன்பு பாலம் இருக்கும் இடம் வரை படகில் சென்று பார்க்க அனுமதி இருந்தது, இப்பொழுது இல்லை.  அங்கு இருப்பவர்களைக் கேட்டால் ராமர் பாலத்தைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கூறுகிறார்கள்.

அக நானுறு பாடல் ஒன்றில் ஒரு ஆண் மகன் தன் மனைவியிடம் கூறுகிரானாம்:  "நாம் காதலித்த போது ஊர் முழுவதும் நம் காதலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.  இப்பொழுது நமக்கு திருமணம் ஆனதும், ஊரே அடங்கி மொளனமாய் இருக்கிறது.  இந்த மொளனம் எப்படி இருக்கிறது என்றால், அன்று பாண்டிய நாட்டின் சமுத்திரக் கரையில், ஆலமரத்தின் கீழே ராமர் போர் முறைகளைப் பற்றி பேசும்போது, அந்த மரத்தில் இருந்த எல்லா பறவைகளும் ஒலி எழுப்பாமல் மொளனமாய் இருந்ததாம்.  அது  போல் இருக்கிறது".
இன்றும் இங்கு ஒலி எழுப்புவார் யாரும் இல்லை.  ராம காதையை பற்றியோ, ராமரைப் பற்றியோ யாரும் வாய் திறந்து பேசுவதில்லை.  ஆனால் இங்கு காற்றில் ராம நாமம் கலந்திருக்கிறது.  இங்கு இருக்கும் ஒவ்வொரு கல்லும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ராமரை நினைவு படுத்துகிறது.  ராமரை அனுபவிக்க சேதுவும், தனுஷ்கோடியும் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.  ஆனால் அங்கு சென்றால் ராமரை கட்டாயமாய் அனுபவிக்கலாம்.

No comments:

Post a Comment