கத்யத்ரயமும், கிரகணமும்.

(மார்ச் 23 அன்று எழுத ஆரம்பித்து அன்றே முடித்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இன்று தான் முடிக்க முடிந்தது.)


இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் euphoria என்று ஒரு வார்த்தை இருக்கிறது.  அதன் அர்த்தத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்று காலை எழுந்திருக்கும் போதே கோபமும், பதட்டமும் உச்சகட்டத்தில் இருந்தது.  கோபத்திற்குக் காரணம் "கிரகணம்'.  பதட்டத்திற்க்குக் காரணம்,  நாளைக்குள் அனுப்ப வேண்டிய என்  ஆங்கில கட்டூரை ஒன்றுக்கு,  என்ன எழுதுவது என்று தெரியாமல்,  நான் திணறிக் கொண்டிருந்தது.   இது போதாது என்று  இன்று "பங்குனி உத்திரம்" வேறு.  பெரிதாக ஏதும் கொண்டாட்டம் ஏதும் கிடையாது என்றாலும்,  ஸ்வாமி இராமானுஜர் இயற்றிய "கத்யத்ரயம்" சேவித்து,   "சர்க்கரைப் பொங்கல்" செயவதை வழக்கமாக கொண்டிருந்தேன். எழுதி முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால், சுலபமாக இருக்கும் என்று, எனக்கு பிடிக்காத கேசரி செய்துவிடலாம் என்று நேற்று இரவே முடிவு செய்து விட்டேன்.

இதில் நடுவில் குட்டையை குழப்பியது கிரகணம்.  இன்று கிரகணம் என்று எனக்கு தெரியாது.  காலையில் எழுந்திருக்கும் போது என் தோழியின் வாட்ஸப் மெசேஜ் தெரியாத்தனமாக கண்ணில் பட்டுவிட்டது.  (நேற்று இரவே அனுப்பி இருக்கிறாள்.  நான் காலையில் தான் பார்க்க நேர்ந்தது). "நாளை காலை சந்திர கிரகணம். 5:30 -10:15".  கோபம் தலைக்கேறியது.  மணி ஏற்கனவே நாலே முக்கால் ஆகிவிட்டது.  ஐந்தரை மணிக்குள் என் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கு எடுத்த செல்ல "லஞ்ச்" பண்ணிவிட்டாலும், அவர்கள் காலை உணவு உண்ணும் போது கிரகணம் இருக்க தானே செய்யும்.  கிரகணம் முடிந்து எப்படி தலைக்குக் குளிப்பார்கள்?  கிரகணம் என்று தெரியாமலே இருந்திருந்தால் அது வேறு விஷயம்.  தெரிந்த பின் கடைபிடிக்காமல் இருப்பதற்கு மனம் ஒப்பவில்லை.  கடைபிடிப்பதற்கும் சந்தர்ப்பம சரியாக இல்லை.  எனக்கு கிரகணத்தைக் காட்டிய அந்த  தோழிக்குக் கோபத்துடன் மெசேஜ் அனுப்பினேன். "அம்மா, தாயே, இன்னொறு முறை இதே போல் ஏடாகூடமாக கிரகணம் வரும் போது தயவு செய்து என்னிடம் சொல்லாதே."

அனுப்பிய பின்னும் நான் அடங்கவில்லை.  மண்டைக்குள் எழுதி முடிக்க வேண்டுமே எனற சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை இல்லை. "வானத்தில் ஏதோ நடக்கிறது, அதற்கு இங்கு நான் ஏதேதோ கடைபிடிக்க வேண்டுமாம்.  வேறு வேலை இல்லை. ஆபிஸ் செல்பவர்கள் எல்லாம் கிரகணாமா கடைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்? எனக்கு என் எழுத்து முக்கியம்.  கட கட வென்று என் சமையலை முடித்து விட்டு நான் எழுத போக வேண்டும்.  பெருமாளே, கேசரியை கிரகண நேரத்தில் செய்வதற்கு எனக்கு இஷ்ட்டம் இல்லை. கத்யத்ரயம் சொல்வதற்கும் நேரம் இல்லை.  எல்லாம் கேன்சல்.   என்னை மன்னித்துவிடு.," என்று மனதில் சொல்லிவிட்டு, பிள்ளைகளுக்கு "லஞ்ச்" செய்து முடித்து, சரியாக 5.40க்கு கிரகண நேரத்தில் குக்கரில் தண்ணி பிடிக்கும் போது,  முன்பு ஒரு கிரகண நாள் அதிகாலையில்  (இரண்டோ, மூன்றோ ஞாபகம் இல்லை), என் அப்பா தர்ப்பணத்தை முடித்து விட்டு மாடியிலிருந்து படி இறங்கி வரும் காட்சி என் கண் முன்னே ஒடியது.  எந்த வயதிலும், எந்த சாஸ்த்திர சம்பிரதாயங்களையும் விடாமல் கடைப்பிடித்த என் அப்பாவிற்கு, பெண்ணாக பிறந்து விட்டு இந்த மாதிரி ஒரு காரியம் நான் செய்யலாமா? கேள்வி எழுந்தது.  யார் எப்படி போனால் எனக்கு என்ன? என் அப்பாவின் பெண் ஒரு நாளும் சம்பிரதாயங்களைக் கடைப்பிக்காமல் இருக்க மாட்டாள் என்று சூளுரைத்துவிட்டு, குக்கரில் பிடித்த தண்ணீரைக் கீழே கொட்டினேன்.  சமையல் வேலை இல்லை.  எழுத வேண்டியது தான்.

நேராகச் சென்று கம்ப்யூட்டரை எடுத்தேன். நானே  தேர்ந்தெடுத்த தலைப்பு தான்.  எப்படி எழுதுவது என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை.  இது வரை எழுதியது அனேகம் என்றாலும், இப்பொழுது முதல் முதலாக ஒரு எழுத்தாளராக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  தமிழில் எழுதுவதே கஷ்ட்டம்.  ஆங்கிலத்தில் எழுதுவது அதைவிட கஷ்ட்டம்.  அதையும் தவிர "அமெரிக்க" வாசகர்களுக்காக "அமெரிக்க ஆங்கிலத்தில்" எழுதுவது மிகவும் கஷ்ட்டம்.  உதாரணத்திற்கு "he will not come" என்று நாம் சொல்லும் ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலத்ததில் " he is not going to come" என்று மாறும்.  எழுத ஆரம்பித்தால் தானே, அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதுவது?  ஒரு மணி நேரம் சென்றும் ஒரு வார்த்தைக் கூட நான் எழுதவில்லை.  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் ஏழே முக்காலுக்கு கம்ப்யூட்டரை எடுத்து மடியில் வைத்துக் கொண்டது தான் தெரியும்.  எப்படி எழுத ஆரம்பித்தேன் என்றே தெரியவில்லை.  எழுதி முடித்து நினைவிற்கு வரும்போது பார்த்தால் மணி  பத்தரை.  அந்த நிமிடம் என் மனம் ஏன் சந்தோஷத்தில் துள்ளியது என்று தெரியவில்லை. எழுதி முடித்த சந்தோஷமா, கிரகணம் முடிந்த சந்தோஷமா என்று தெரியவில்லை.

என்னை எழுத வைத்த அந்த கடவுளுக்கு கத்யத்ரயம் என்னால் சொல்ல முடியாதா, ஒரு சர்க்கரைப் பொங்கல் என்னால் பண்ண முடியாதா?  கேள்வி எழுந்தது.  குக்கரில் தண்ணியைப் பிடித்தேன்.  யூ ட்யூபில் "கத்யத்ரயம்"  ஸ்லோகம் ஒலிக்க ஆரம்பித்த போது, பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் எனக்கு கத்யத்ரயம் கற்றுக் கொடுத்து என் குருவான அந்த பெண்மணியின் நினைவு வந்தது.  கத்யத்ரயம் மிகவும் கடினம் எனக்குக் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று  நான் பின் வாங்கிய போது என்னை ஊக்கப்படுத்தி நல் வார்த்தைகள் சொல்லி விடாப்பிடியாக எனக்குக் கற்றுக் கொடுத்தாள். ஸ்லோகங்களை மற்றும் சொல்லிக் கொடுக்காமல், அதன் அர்த்ததையும் கூடவே சொல்லிக் கொடுத்தாள்.  இன்று சொன்ன போது ஸ்லோகங்கள் சில இடத்தில் நான் மறந்துவிட்டாலும். அர்த்தம் நன்றாய் நினைவில் இருந்தது.  கத்யத்ரயம் சொல்லி கொண்டே சர்க்கரைப் பொங்கல் செய்ததாலோ என்னவோ இன்று  சக்கரைப் பொங்கல் மிகவும் அருமையாய் வாய்த்திருந்தது.  மனம் சந்தோஷத்தில் பூரித்துப் போனது

இத்தனையும் செய்த "அவர்", ஆரம்பத்திலிருந்தே என்னை நல்வழியில் செலுத்திருக்கலாம்.  போகட்டும் அடுத்த முறை நான் வழிமாறிப் போகும்பொழுதாவது முதலிலேயே என்னை திருத்துகிறாரா பார்ப்போம்?  இன்று என் அப்பாவைக் காட்டி என்னை நல்வழிப் படுத்தினார்.  அடுத்த முறை யாரோ?

எது எப்படியோ, என் கடைமைகள் எல்லாவற்றாயும் ஒழங்காக செய்து விட்டதாலோ என்னவோ,
இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் euphoria என்று ஒரு வார்த்தை இருக்கிறது.  அதன் அர்த்தத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறேன்.


2 comments:

  1. மிக மிக அருமை, எனதாவி ஆவியும் நீ, எனதாவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே என்னும் ஆழ்வார் பாசுரம் நினைவில் வருகிறது

    ReplyDelete