ஒ நண்பா, நண்பா...

 சத்தியமாக, சர்வ நிச்சயமாக, உண்மையாக,  தலைப்புக்கும், இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  பின் எதற்கு இந்த தலைப்பு? நான் எழுத தொடங்கும் போது, இந்த பாட்டு காற்றில் கலந்து, காதில் வந்து எதிரொலித்ததால், உணர்ச்சி வசப்பட்டு, ஒரு ஆசையில், ஒரு உந்துதலில் இந்த தலைப்பை வைத்துவிட்டேன். மேலும்  தலைப்பைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்பவர் அல்ல நீங்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.  ஆதலால் தான்…….

இந்த பதிவை எழுதலாமா வேண்டாமா என்று என்னுள் மிகப் பெரிய போராட்டம்.  ஏனெனில் இது எழுதுவதால் என் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்று ஒரு கவலை.  கவலையை புறங்கையால் விலக்கினேன். இமேஜ் இருந்தால் தானே டேமேஜைப் பற்றி கவலைப் படவேண்டும்.  இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப்படுவானேன்?

ஒரு இருள் கவிழ்ந்த அந்தி மாலைப் பொழுது.  வழக்காமாய் கறிகாய் வாங்கும் சூப்பர் மார்க்கெட்.  வெளியில் இருந்த ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு கடைக்குள் சென்றேன்.  பல வண்ணத்தில் கறிகாய்களும் பழங்களும் கொட்டிக் கிடந்தன. எனக்குத் தேவையான சிவப்பு நிற தக்காளி பழங்களையும், மஞ்சள் நிற மாம்பழங்களையும், கருப்பு நிற திராட்சை பழங்களையும் அள்ளி கார்ட்டில் வைத்துக் கொண்டு, "கிவி" பழங்கள் இருக்கும் இடத்திற்கு வர, அங்கே என் "டேமேஜ்" நின்று கொண்டிருந்தது, ஒரு ஆண் மகன் ரூபத்தில்…..

 சிவப்பு நிறத்தில் கருப்பு கோடுகள் போட்ட ஸ்வெட்டர்,…….அவன் எப்படி இருந்தான் என்பது இங்கு    முக்கியம் அல்ல.  மிக முக்கியமானது,  தானும் வாங்காமல், என்னையும் வாங்க விடாமல் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.  அவன் வாங்காதற்குக் காரணம், போனில் யாருடனோ சிரித்து சிரித்து கதைத்துக் கொண்டிருந்தான். கட்டாயமாக அவன் காதலியாகத் தான் இருக்க வேண்டும்.   (இது "வாட்ஸ் அப்" சொல்லிக் கொடுத்த பாடம்.  காதலிக்கும் போது சிரிப்பும் கதைப்பும்.  கல்யாணத்துக்கு பிறகு முறைப்பும், மொளனமும் ).  "எக்ஸ்க்யூஸ் மி" என்று சொல்லிப் பார்த்தேன்.  அவன் காதில் விழவில்லை.  இதற்கு மேல் அவனிடம் பேசி ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று தெரிந்து போனது.  மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டு, மீண்டும் வருவோம் என்று நினைத்து, அவன் என்னை பார்க்காத போதிலும், ஒரு முறை முறைத்து விட்டு  நகர்ந்தேன்.

மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டு, மீண்டும் கிவி இருக்கும் இடத்திற்கு வந்தால், அந்த மஹானுபாவன், அதே இடத்தில், அதே நிலையில்(சிரித்து, கதைத்து) நின்று கொண்டிருந்தான். கோவம் தலைக்கு ஏறத்  தொடங்கியது.  ஆண் மகனாய் இருந்து விட்டதால் அவனை ஒரு இடி இடித்து  இடத்தை விட்டு நகர செய்ய முடியவில்லை.  இதுவே பெண்ணாக இருந்தால்…………..….ஃப்ளாஷ் பேக் நேரம்.  ஃப்ளாஷ் பேக் பிடிக்காதவர்கள் அடுத்த பத்தியை தவிர்க்கலாம்.

முன்பு ஒரு சமயம்.  இதே சூப்பர் மார்க்கெட்.  ஒரு பெண்மணி.  இதே போல் போனில் பேசிக் கொண்டு, இடம் விடாமல்  உபத்திரவம் செய்து கொண்டிருந்தாள்.  "எக்ஸ்க்யூஸ் மி" என்று சொல்லிப் பார்த்தேன், அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை.  இனி வாயால் சொல்லி வேலைக்கு ஆகப் போவதில்லை என்று புரிந்தது.   வேறு முறைகளை தான் பின் பற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்து அவளை ஆராய்ந்தேன்.  ஏனென்றால் ஒரு காரியம் செய்வதற்கு முன்னால் சுற்றுப் புறத்தை நன்றாய் ஆராய வேண்டும் என்பது சாணக்கியரின் அறிவுரை.  நிஜமான  சாணக்கியர் அல்ல.  நாடக நடிகர் திரு. ஆர். எஸ். மனோகர்  தன்னுடைய "சாணக்கியர்" நாடகத்தில் ஒரு அரசனுக்கு  கூறிய அறிவுரை இது.  அதாவது ஒரு அரசனாகப்பட்டவன், "அதிரசம்" சாப்பிடுவது போல் எதிரி நாட்டை பிடிக்க வேண்டுமாம். அதிரசம் பொரித்து எடுத்தவுடன் மிகச் சூடாக இருக்கும்.  உடனே கடித்தால் வாய் வெந்துவிடும்.  ஆதலால் முதலில் ஒரங்களை மெது மெதுவாக ஊதி தின்று விட்டு,  பின்பு நடு பகுதிக்கு வரவேண்டுமாம்.  அது போல், ஒரு அரசனும் எதிரி நாட்டின் மன்னனை நேரே சென்று தாக்காமல்,  அந்த மன்னருடைய நாட்டின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் குறு நில மன்னர்களை அழித்துவிட்டு பின் அந்த எதிரியை தாக்க வேண்டுமாம்.  அதே போல் நானும் அந்த பெண்மணியை தாக்குவதற்கு முன் ஆராய்ந்ததில் அம்மணி  உச்சி முதல் உள்ளங்கால் வரை "ப்ராண்டட்"என்று நன்றாய் புலப்பட்டது.    கோச் ஹண்ட் பேக், கோச் வாலட், ஐஃபோன், நார்த் ஃபேஸ் ஜாக்கெட், கடைசியாக கோச் செருப்பு.  ப்ராண்டட் போடும்  அளவிற்கு நாகரிகம் தெரிகிறது, மற்றவர்களுக்கு வழி விடும் நாகரிகம் தெரியவில்லை,  இந்த அம்மணிக்கு "இடி" வைத்தியம் உகந்தது தான், தீர்மானித்தேன்.  இடிப்பது என்பது உறுதியாகிவிட்ட பிறகு, இடித்த பின் எனக்கு நானே இட்டுக் கொண்ட விதிமுறைகள்.


  1. அந்த அம்மணியின் ரியாக்‌ஷனைப் பற்றி கவலைப் படக்கூடாது.  
  2. எதையும் தாங்கும் "திக் ஸ்கின்" வேண்டும். 
  3. அவள் முறைக்கலாம் அல்லது கத்தலாம்.  முறைத்தால் மீண்டும் முறைக்க வேண்டியது தான்.  

(ஆப்பிள் நிறுவனர் "ஸ்டீவ் ஜாப்ஸ்" போன்று  கண் இமைக்காமல் முறைத்து, எதிரியை கவிழ்க்கும் திறமை எள்ளளவும் எனக்கு இல்லாவிட்டாலும்,  ஏதோ என்னால் முயன்ற அளவு முறைப்பது)

     4.  அவள் கத்தினால் கல் போல், கட்டை போல் இருக்க வேண்டும்.

இவ்வாறு நான்கு தீர்மானங்களைப் போட்ட பிறகு,  அவளை தாக்க நினைக்கையில், என் நாகரிகம் தலை தூக்கி என் மனதை மாற்றியது.  தலை தூக்கிய "நாகரிகத்தை" ஒரு போடு போட்டு, என் கார்ட்டால் அவள் கார்ட்டை நன்றாய், மிக நன்றாய் இடிக்க, அவள் ஃபோன் பேசுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு என்னைப் பார்க்க, நான் ஒன்றுமே நடக்காதது போல் அவளைப் பார்க்க, ஒரு வழியாக  அம்மணி நகர்ந்தாள். (அப்……….பா, எவ்வளவு பெரிய ஃப்ளாஷ் பேக்).

இன்னும் கூட நகராமல் அதே இடத்தில் டெண்ட் போட்டிருக்கும் அவனுக்கு கடைசி வாய்ப்பு அளிப்பது எனத் தீர்மானித்து, என் கார்ட்டை அவன் பக்கதிலயே நிறுத்திவிட்டு (அப்போதாவது அவனுக்கு புத்தி தெளியாதா என்று ஒரு நினைப்பு) மிச்சம் மீதி கொசுறுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வர,……..இடித்த புளி போல் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.  ப்ளட் ப்ரஷர் கன்னா பின்னாவென்று ஏற,  "இனி என் வாழ்க்கையில் கிவி வாங்கினால், என் பெயரை மாற்றி வைத்துக் கொள்கிறேன்" என்று சபதம் செய்துவிட்டு,  கார்ட்டைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தேன்.

நான்கு அடி போவதற்குள்,  "எக்ஸ்க்யூஸ் மி, மேடம்," என்று ஒரு குரல்.  யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நகர்ந்தேன்.  என் பின்னால் யாரோ வேகமாக நடந்து வருவது போல் ஒரு சத்தம்.  நான் கழுத்தை திரும்பி பார்க்கவும், அவன்(அதான் அந்த கிவி மகன்) என் முன்னே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

இன்னும் ஒரு நிமிடத்தில்  நான் நிலை குலையப் போகிறேன் என்பது தெரியாமல், மனதில் ஆயிரம் சிந்தனைகள்.

"இத்தனை நேரம் நான் அங்க தானே இருந்தேன், வழி விட்டயா? இப்ப எதுக்கு பின்னாடி வர?"

"பரவால்லையே.  இவ்வளவு சீக்கிரம் பேசி முடிச்சுட்டயே"

"ஐ.டி. தானே? சப்போட்டா, டெவ்லப்மெண்டா?'


என் சிந்தனைகளை கலைத்து அவன் குரல்.  "மேடம்….." என்று தொடங்கி அவன் ஹிந்தியில் பேச, ஒவ்வொரு சொல்லும், அவனுடைய ஒவ்வொரரு சொல்லும் ஈட்டி போல் என் நெஞ்சில் பாய்ந்தது.  கண் இருண்டு, தலை சுற்றி உலகம் இருண்டது.   உள்ளே இடி இடித்தது. மரங்கள் பேய் போல் அசைந்தது. சுனாமி அலைகள் எழுந்தது.  அந்த கடும் புயலில் சிக்கி தவித்து சுதாரித்து என் நிலைக்கு வருவதற்குள்…..அப்பபா…….என் கையில் இருந்த கார்ட்டை அவன் தள்ளி செல்ல, அவன் கூறியது மீண்டும் நினைவிற்கு வந்தது.

"மேடம், நீங்கள் தள்ளிக் கொண்டு போனது என்னுடைய கார்ட்.  உங்கள் கார்ட் அங்கே இருக்கிறது."

நான்கு அடி தொலைவில், சிவப்பு நிற தக்காளி பழங்களும், மஞ்சள் நிற மாம்பழங்களும், கருப்பு நிற திராட்சை பழங்களும் நிறைந்த என் கார்ட் என் வரவை நோக்கி காத்துக் கொண்டிருந்தன.



டெயில்பீஸ்:  "ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கை விடமாட்டான்".  இங்கே "நல்லவங்க" என்பது என்னை (மட்டுமே) குறிக்கும்.  என்னவாகிப் போனது என்றால், நம் கிவி மேன்,  என்னிடம் இருந்து கார்ட்டை வாங்கிக் கொண்டு(பிடிங்கிக் கொண்டு) சென்ற பின், அந்த கார்ட்டில் அவனுடைய  கிவி நிறைந்த ப்ளாஸ்டிக் கவரை  வைக்கப் போக, கிவியின் கனம் தாங்காமல் அந்த ப்ளாஸ்டிக் கவர் கிழிய, கிவியெல்லாம் கீழே விழுந்து  திசைக்கு ஒண்றாக உருண்டு ஒடியது. அதில்  இரண்டு  கிவி என் காவிழ,  மினி வேன்…….ஸாரி……..நம் கிவி மேன் அவற்றை பாய்ந்து எடுக்கும் சமயம்,

"நண்பா...கறிகாய் வாங்கும் போது காதலிச்சா இதுவும் நடக்கும், இதுக்கு மேலயும் நடக்கும்."

அவளுக்கு சொல்ல ஆசை.  சொல்ல முடியாமல் தடுத்தது பாஷை!!


No comments:

Post a Comment