சில்லென்று ஒரு நட்பு....

போன வாரத்தில் ஒரு நாள், facebookஇல்  ஒரு Valentine Day quote .  Happy Valentine's Day my friend என்று ஆரம்பித்து நட்பின் அழகை மிக அருமையாய் விவரித்து இருந்தது.    அதை படித்த பின்  இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட   அழகான நட்பு நினைவில் வந்தது.   நினைவில் வந்தது என்று சொல்வதை விட,  ஒரே ஒரு வருட நட்பின் எல்லா நாட்களையும்  சில்லறை கொட்டுவது போல் "டக டக" வென கொட்டி விட்டது    "சில்லென்று ஒரு காதல்" போல் "சில்லென்று ஒரு நட்பு..." 

அப்பொழுது  B.Sc. Maths முடித்த நேரம்.  computer கற்றுக் கொள்வது கட்டாயமாக இருந்த காலம்.  கறாரும் கண்டிப்புமான அப்பா type writing classற்கு கூட எங்களை அனுப்பியது கிடையாது.  ஏனெனில் Type writing class என்பது காதலும் காதல் சார்ந்த இடமும்.  எங்கெல்லாம் காதல் வயப்பட வாய்ப்பிருக்கிறதோ எங்கெல்லாம் ஆண்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த இடத்துக்கு எல்லாம் செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. Busஇல் போனால் கூட  நீளமாய் இருக்கும் அந்த  கடைசி வரிசையில் உட்கார அனுமதி கிடையாது.  அது பெண்கள் சீட்டாக இருந்தாலும், அங்கு ஆண்கள் கூட்டம் அதிகமாய் இருக்கும் என்பதால்.  இப்படி ஆண்கள் வாடையே படாமல் வளர்த்த என் அப்பா, காலத்தின் கட்டாயத்தாலும், பெண்களுக்கேன தனியாக கம்ப்யூட்டர் செண்டர் இல்லாததாலும்,  ராயப்பேட்டா மணி கூண்டு அருகில் இருந்த கம்ப்யூட்டர் கிளாசில் சேர்த்து விட்டார். பணம் கட்டுவதற்காக போன அன்று, அங்கு இருந்த college boys  கூட்டத்தை கண்டு என் அப்பா மிரண்டு இருக்க வேண்டும்.  Fees கட்டி முடித்த கையோடு "இங்கெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்ற அறிவுரை.  "ஜாக்கிரதையா இருக்கணும்" is equal to "நான் யாரையும் லவ் பண்ணக் கூடாது, என்னையும் யாரும் லவ் பண்ணக் கூடாது,  லவ் பண்றவங்களோட  நான் friendsஆ இருக்கக் கூடாது.." இது போதாது என்று என் அம்மா வேறு.  தினம்   மந்திரம் ஓதுவாள்  "காதல் கீதல் பண்ணிடாத.." என்று.  பூம் பூம் மாடு போல் எல்லாவற்றையும் (எரிச்சலுடன்) தலையாட்டிக் கேட்டுக் கொண்டு முதல் நாள் கிளாசிற்கு போனால்....

நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் ஆகவில்லை.  எனக்கு அருமையான  மூன்று தோழிகள் கிடைத்தனர்.  எனக்கு தான் இந்த பசங்களுடன் பேசக் கூடாது என்று கட்டுப்பாடே தவிர, என் தோழிகளுக்கு இல்லை.  அவர்கள் கலாய்த்துக் கொண்டிருக்க, நான் கம்மென்று இருப்பேன்.  அவ்வ்ப்பொழது வந்து பேசும் பையன்களிடம் எந்த வகையிலாவது என் அப்பா புகட்டிய தாரக மந்திரத்தை(நான் யாரையும் லவ் பண்ணக்கூடாது....) ஜபித்து விடுவேன்.  இப்படி இருக்கையில் தான்.....

என் வாழ்வின் வசந்தம், நான்கு கல்லூரி மாணவர்கள் மூலம் வந்தது.  (அதில் மூன்று  லயோலா காலேஜ், ஒன்று ந்யூ காலேஜ் என்பதும், அந்த நான்கும் என்னை விட வயதில் சிறியது என்பதும் பழகிய பின் தெரிந்தது).  என் தோழிகளும், இந்த நான்கு பேரும்  நெருக்கமாகிவிட, நானும் அவர்களுடன் பேச ஆரம்பித்த ஒரு நாள், அந்த நான்கில் ஒன்று, ஏடாகுடமான கேள்வி ஒன்று கேட்டது.

"  நாங்களாம் மூஞ்சிக்கு மைசூர் சாண்டல், சிந்தால், ரெக்ஸோனா போடுவோம்.  நீங்க surf போடுவீங்க போல இருக்கு?"

"ஒரு நாளைக்கு ஒரு கிலோ சர்ஃப் யூஸ் பண்ணுவீங்களா? கூட ப்ளீச்சிங் பவுடர் உண்டா?"

"உங்கப்பா சர்ஃப் பிஸ்னஸ் பண்றாரா, ப்ளீச்சிங் பவுடர் பிஸினஸ் பண்றாரா?"

இப்பொழுது சிரிப்பு வருகிறது.  அன்று சுருசுருவென்று கோவம் வந்தது.

"இந்த மாதிரி எல்லாம் எங்கப்பாவ பத்தி தப்பா பேசினா, நான் பேசவே மாட்டேன்.." என்று ஆரம்பித்து என் அப்பாவின் புராணம் பாடி, என் அப்பாவின் தாரக மந்திரத்தை  சொல்லி முடிப்பதற்குள்...

"அக்கா...மன்னிச்சுக்க அக்கா...இனிமே உங்கப்பாவ பத்தி பேச மாட்டோம்..." ஒன்று கை கூப்பிற்று.  சொன்னபடியே என் அப்பாவைப் பற்றி அதற்கு பிறகு அந்த நான்கும் பேசவில்லை. இதற்கிடையில் நட்பு பலமாகி, அவர்கள் உலகத்திற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அவர்கள் உலகத்தில் பயம் இல்லை, சண்டை, சச்சரவு, கோவம், வம்பு, கவலை ஏதும் இல்லை.இருந்தது எல்லாம் சிரிப்பு, சந்தோஷம் , கலாய்ப்பு அதற்குபிறகு பெண்கள். எங்களை பக்கதில் வைத்துக் கொண்டே எல்லா பெண்களையும்  sight அடித்து, comment அடித்து.... அப்பபா...  ஆனால் அந்த்  நான்கும் படிக்க மட்டும் செய்யாது.  நாங்கள் எழுதும் cobol/dbase programஐ காப்பி அடித்து master இடம் காட்டிவிடும்.  இதை கண்டு கொண்ட மாஸ்ட்டர் labல் ஒரு நாள் எங்கள் எல்லார் முன்னிலையிலும் cobol program ஒன்று run பண்ணுமாறு அந்த நான்கையும் கேட்டுக் கொண்டார்.   எங்களைப் பார்த்து காப்பியடித்த codeஐ (பெரிய பந்தாவுடன்)type அடித்து விட்டு, program run பண்ணும் போது error message வந்தது..... நான்கும் திக்குமுக்காட, எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு.  "இனிமேல் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய கூடாது.." என்று எங்களை எச்சரித்து விட்டு , அந்த மாஸ்ட்டர் அவர்களுக்கு நீண்ட அறிவுரை ஒன்று வழங்கிவிட்டு போக, அடுத்த நிமிடம்... "டேய்,  லீவ் முடிஞ்சு ஷங்கரி(அழகான receptionist) வந்துட்டாடா..." என்று சொல்லிக் கொண்டே அவளை பார்க்க ஒடிவிட்டது.  மாஸ்ட்டர் கூறிய அறிவுரை காற்றோடு கலந்து மாயமாய் மறைந்து போனது.   நானும் ஒரு விஷயத்தை  மாயமாய் மறைக்க வேண்டும் என்று நினைத்து ....

 Annamalai Universtiyயின் correspondence courseஇல் M.Sc. Maths படித்துக்  கொண்டிருந்தேன்.  மாதத்திற்கு ஒரு சனிக்கிழமை ஏதாவது காலேஜில் contact class நடக்கும்.  லயோலா காலேஜ் என்று ஒரு முறை தெரிந்த போது,

"உங்க காலேஜ்ல தான் நாளைக்கு எனக்கு காண்டாக்ட் க்ளாஸ்..." என்றேன்.

"எங்க காலேஜா?  சனிக்கிழமை அன்னிக்கு தான் நிறைய பசங்க இருப்பாங்க...." ஒன்று சொல்லிற்று

"ஒரே ragging தான். நீங்க காலி," இன்னொன்று பேசிற்று.

எதை மறைக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதை ஒளறிக் கொட்டிவிட்டேன்.

"நான் தான் எங்கப்பா கூட வர போறேனே..."

என்னவோ பெரிய ஜோக் சொன்னது போல் பலமாய் கைகொட்டி சிரித்தது நான்கும்.

" அக்கா எல்.கெ.ஜி.,  படிக்க போறாங்க..அதான் அப்பா கூட வராரு..."

"உங்க அப்பாவ பத்தி ஒவரா film காமிச்சீட்டீங்க.  அதனால....உங்கப்பாவ பாக்க நாங்க நாளைக்கு வரோம்..."

ஏதோ விளையாட்டுக்கு பேசுகிறது எல்லாம் என்று  நினைத்தால்....

அவ்வளவு பெரிய லயோலா காலேஜில்(காலேஜ் ஈயடித்தது) என் கிளாஸ் இருக்கும் இடத்தை அடைந்தால், கிளாஸ் ரூமிற்கு சற்று தொலைவில்...அந்த நான்கும்  நின்று கொண்டிருந்தது.  பயந்து போனேன்.  விளையாட்டு தனமாக என் அப்பாவிடம் வந்து பேசி, வம்பில் என்னை மாட்டி விட போகிறதே என்று படபடத்துக் கொண்டிருக்கும் போது,  மெல்ல சிரித்து விட்டு,  பாம்பு போல் நான்கும் நழுவிச்  சென்றது. 

அந்த course முடிய இரண்டு வாரங்களே இருந்த நிலையில், ஒரு தாத்தா ரூபத்தில் வம்பு வந்தது
(அந்த வயதில் அவர் எனக்கு தாத்தாவாய் தெரிந்தார்.  இப்பொழுது யோசித்துப் பார்த்தால், அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும்).  காலை வழக்கம் போல் கிளாஸிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க, அந்த தாத்தா  வந்தார்.  ஹிந்தியில் ஏதோ என்னை கேட்க, நானும் எனக்கு தெரிந்த ஹிந்தியில் பதில் சொன்னேன். அத்துடன் நிற்காமல் நான் ஏறும் பஸ்ஸிலேயே ஏறி,  நான் இறங்கும் இடத்திலேயே அவரும் இறங்கினார்.  ஏதோ பேசியபடியே என்னுடன் கம்ப்யூட்டர் கிளாஸ் வரை வந்தார்.  அத்துடன் விட்டாரா....மத்தியானம் நான் கிளாஸ் விட்டு வெளியே வரும் போது எங்கிருந்தோ வந்து சேர்ந்து கொண்டார்.  என்னுடனே கூட பஸ்ஸில் பிரயாணம் செய்து... நான் இறங்கும் இடத்தில் இறங்கி.....அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் என...தினமும் வர  மண்டையில் அலாரம் அடித்தது. என்ன தான் தாத்தாவாய் இருந்தாலும் எதற்காக இப்படி வருகிறார் என்று புரியவில்லையே என்று குழப்பம்.  அப்பாவிடம் சொன்னால்,  குமரனாய் இருந்தாலும், கிழவராய் இருந்தாலும் ஆண் ஆண்தான் என்று சொல்லி  கிளாஸ் போனது போதும் என்று நிறுத்தி விடுவார், இல்லையென்றால் தினமும் என்னுடன் வருவார்.  Course முடிந்து exam எழுதும் நேரத்தில் என்ன  பிரச்சனை இது என்று மண்டை ஓவராய் உடைய, அந்த நான்கிடமும் சொல்ல....

"போயும், போயும் ஒரு தாத்தாவ உங்கள follow பண்றாரு..." அதே கைகொட்டி சிரிப்பு.

"உங்ககிட்ட சொன்னதுக்கு சொல்லாம் இருந்திருக்கலாம்...."

"நாங்க பாத்துக்கறோம். நீங்க போங்க...." என்று என்னை அனுப்பி வைத்தது.

இந்த நான்கையும் நம்பலாமா வேண்டாமா என்று நினைத்த படி பஸ் ஸ்டாப்பிற்கு போனால், தாத்தா நின்று கொண்டிருந்தார்.   "அட கடவுளே..." என்று நொந்தபடி தலையைத் திருப்பினால்....அங்கே ஒரு பெட்டிக் கடையில்.....நான்கில் ரெண்டு நின்று கொண்டிருந்தது.  சந்தோஷத்தில் சிலையானேன்.  கண் ஜாடையால் தாத்தவை காமிக்க, ரெண்டும் வந்து தாத்தாவின் பக்கத்தில் நின்று கொண்டு அவரை நகர விடாமல் செய்தது.  சிறிது நேரத்தில் பஸ் வர...பஸ்ஸின் footboardஇல் மீதி ரெண்டு.  உரைந்து போனேன்.  இந்த நான்குக்கும் நாம் என்ன பண்ணோம்.. நமக்காக இப்படி வந்திருக்கே என்று உணர்ச்சி வசப்பட்டது உண்மை.  நான்கும்  தாத்தாவை என் பின்னால் பஸ்ஸில் ஏற விடாமல் பார்த்துக் கொண்டது.   அவர் ஏறிய பின் அவரை சுற்றி நான்கும் body guard போல் நின்று கொண்டது.  இறங்க வேண்டிய இடம் வந்து நான் இறங்க,  என்னுடன் அந்த தாத்தா இறங்கவில்லை.  அந்த நான்கும் என்ன செய்து தாத்தாவை இறங்காமல் பார்த்துக் கொண்டது என்று தெரியவில்லை.   பஸ் புறப்பட்டு போக, அந்த நான்கும்  என்னை திரும்பி கூட பார்க்கவில்லை....மறு நாள் காலை...பஸ் ஸ்டாப்பில் தாத்தா நின்று கொண்டிருக்க, அவருக்குப் பக்கத்தில் அந்த நான்கும்.  சத்தியமாக காலை நேரத்தில் அந்த நான்கையும் நான் எதிர்பார்க்கவே இல்லை.  என்னுடனே பஸ் ஏறி, அந்த தாத்தாவை கவனித்துக் கொண்டு, நான் இறங்கும் இடத்தில் இறங்கி....என்னுடன் கூட க்ளாசிற்கு நடந்து வராமல் அந்த நான்கும் கிடுகிடுவென்று முன்னே போய்விட்டது.  க்ளாசில் போய் பேசிக் கொள்வோம் என்று பார்த்தால்,  practicals.  யாரும் யாருடனும் பேசமுடியாது.  சரி practicals முடிந்த பின் பேசுவோம் என்று பார்த்தால், அந்த நான்கும் இருக்கும் இடம் தெரியவில்லை.   நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று பஸ் ஸ்டாப்பிற்கு வந்தால், அந்த நான்கும் தாத்தாவை சுற்றி  நின்று கொண்டிருந்தது.  அன்று மட்டும் இல்லை, தொடர்ந்து நான்கைந்து  நாட்கள் காலையும், மத்தியானமும் என்னுடனே கூட வந்து...என்னுடன் ஒரு வார்த்தை பேசாமல்.....அதற்கு பிறகு அந்த தாத்தாவையும் பார்க்கவில்லை.
அந்த நான்கையும் பார்க்கவில்லை.  விசாரித்ததில் அவர்களின் practicals நேரம் மாலை வேளைக்கு மாற்றப்பட்டது என்று தெரிந்தது.  cell phone, facebook, whatsapp இல்லா காலம்.  எங்கு போய் அவர்களை தேடுவது.  இப்பொழுது எல்லாம் இருக்கிறது. ஆனால் தேட மனமில்லை. இத்தனை வருஷத்தில் எப்படி  மாறியிருப்பார்களோ ....பெட்டிக் கடையில் பார்த்த முகமும், footboardல் பார்த்த முகமும் என் மனதில் இருக்கிறது. அது அப்படியே இருந்து விட்டு போகட்டும் பொக்கிஷமாய்.





No comments:

Post a Comment