என்னுயிர் தோழியே


இந்த பதிவுக்கு "மார்கழி ஒன்று" என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்.  "மார்கழி ஒன்று" என்று தலைப்பு வைத்து விட்டு உள்ளே ஆண்டாளைப் பற்றியும், திருப்பாவைப் பற்றியும் எழுதியிருப்பேன் என்று யாராவது தப்பு கணக்கு போட்டு விட்டால்...அதுவும் தவிர "என்னுயிர் தோழியே" எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  (உங்களுடையது browser chrome ஆக இருந்தால் இந்த பாட்டு கேட்டிருக்குமே) தலைப்பின் காரணம் புரிந்ததா?  
இது  பல வருடங்களுக்கு முன்னால்...அதாவது என் அப்பா இருந்த காலத்தில், வாட்ஸ் அப் இல்லாத காலத்தில் மார்கழி மாதம் முதல் நாள் நடந்த ஒரு  நிகழ்வு.. இன்று வரை மனதை விட்டு நீங்கா நினைவு...

தலைப்பில் கூறப்பட்ட என் தோழி எனக்கு எதிர் பில்டிங்கில் இருக்கிறாள். சுந்தரத் தெலுங்கு  பேசுபவள்.  என்னை விட வயதில் சிறியவள் ஆனாலும், படிப்பிலும், அறிவின் முதிர்ச்சியிலும் என்னை விட உயர்ந்தவள்.  எங்கள் குழந்தைகள் ஒரே பள்ளியில் படிக்கும் ஆருயிர் நண்பர்கள்.  என் வீட்டு பால்கனி  ஜன்னலிலிருந்து பார்த்தால், அவள் வீட்டு பால்கனி ஜன்னல் தெரியும்.   என் நாளின் முக்கியமான பணி, காலையில் முதல் வேலையாக என் வீட்லிருந்து அவள் வீட்டைப் பார்ப்பது.  இது எதுவும் வம்புக்காக அல்ல.  அவள் வீட்டு ப்ளைண்ட்ஸ் திறந்திருக்கிறதா, லைட் எரிகிறதா, வீட்டில் நடமாட்டம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வதற்கு என்றாலும், நமக்கு தெரிந்த ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று ஒரு அற்ப சந்தோஷம்.  நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது. என்ன தான் உற்ற தோழி என்றாலும் அவள் வீட்டை நான் வேவு பார்ப்பதை எப்படி சொல்லுவது.  ஆனால்....என் வாய் என் சொல்லை கேட்பதில்லை.

பாட்லக் டின்னர்க்காக அவள் வீட்டில் கூடியபோது, ஆர்வக் கோளாறால் நான் வேவு பார்பபதை உளறிக் கொட்டிக் கிளற, அவள் அதிர்ச்சிக்குள்ளாக, அவள் கணவரோ அடக்க மாட்டாமல் சிரி சிரிக்க, நான் ஏதும் புரியாமல் முழிக்க....விஷயம் இது தான்.  அவளும் காலை எழுந்து முதல் வேலையாக என் வீட்டின் பிளைண்ட்ஸ் திறந்திருக்கிறதா, என் வீட்டில் லைட் எரிகிறதா, என் வீட்டில் நடமாட்டம் இருக்கிறதா....பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறாள் என்பதை அவள் கணவர் சிரிப்பிற்கு நடுவில் சொல்ல....எங்கள் இருவருக்குள்ளும் "விஞ்ஞான மாற்றமா,  மெய்ஞான மாற்றமா" ஏதோ ஒன்று நடந்து....அன்றிலிருந்து உயிர் தோழிகள் ஆகிவிட்டோம்.  மண்டை உடையும் சண்டையும்   போட்டுக் கொள்வோம்.  எங்கள் சண்டையைப் பார்ப்பவர்கள் இனி ஒருவர் முகத்தில் மற்றவர் விழிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்ள.....நாங்கள் சண்டை எல்லாம் மறந்து வழக்கம் போல் "ஜன்னல் விடு தூது" நடத்திக் கொண்டிருப்போம்.

இப்படி இருக்கையில் தான் மார்கழி பிறக்கும் நாள் வந்தது.  அந்த வருடம் மார்கழி மாதம் பிறப்பதில் ஒரு கசமுசா.  இந்தியாவின் மார்கழி பிறப்பும், அமெரிக்காவின்  மார்கழி பிறப்பும் வேறு வேறாக இருக்க, என்றைக்கு மார்கழி தொடங்கலாம் என்று குழம்பிக் கொண்டிருந்த  வேளையில், இரவு சுமார் ஏழு மணிக்கு அவளிடமிருந்து ஐமெசேஜ்..."சுஜாதா, நாளைக்கு தான் மார்கழி பிறக்கிறது என்று என் அம்மா சொன்னாள்.  அதனால் நாளையே நாமும் மார்கழி மாதத்தை  ஆரம்பிப்போம்...." என்றதோடு நிறுத்தாமல், ஐந்து மணிக்கு எல்லாம் விழிக்க வேண்டும், பொங்கல், சக்கரைப் பொங்கல் எல்லாம் செய்ய வேண்டும் என்று அவள்  மெஸெஜ்  அடித்துக் கொண்டே போக....இங்கே தான் ஆரம்பம் என் கதை.

அவள் ஐந்து மணிக்கு எழுந்தால் எனக்கு  என்ன வந்தது.  சும்மா இருக்க வேண்டியது தானே.....போட்டா போட்டி.....அவள்  ஐந்து மணிக்கு எழுந்தால் நாம் நாலரைக்கு எல்லாம் எழுந்து விடவேண்டும் என்று திட்டமிட்டு .....நாலரை மணிக்கு அலராம் வைத்து படுத்து....அலராம் அடிப்பதற்கு முன்னரே (அவள் எங்காவது எழுந்து விடுவாளோ என்று பயம்...) விழித்து.... அவள் வீட்டு ஜன்னலைப் பார்த்தால்.....அவள் வீட்டில் ட்யூப் லைட் பிரகாசமாக எரிந்து  கொண்டிருந்தது.  என் உலகம் ஒரு நிமிடம் நின்று போனது.  நமக்கு முன்னரே எழுந்து விட்டாளே....  இது எப்படி நிகழலாம்...நான் தானே அவளுக்கு முன்னால் எழுந்திருக்க வேண்டும்.....மனம் வேகமாக அடித்துக் கொண்டது. 

"அவள் நமக்கு முன்னமே எழுந்து விட்டாள்" என்ற நினைப்புடனேயே காலைக் கடன்.
 "அவள் நமக்கு முன்னமே எழுந்து விட்டாள்"  திருப்பாவை.
"அவள் நமக்கு முன்னமே எழுந்து விட்டாள்"   பொங்கல் நைவேத்தியம் .

 எல்லாம் முடித்த  பத்தாவது நிமிடத்தில் அவளிடமிருந்து மெசேஜ்..."சுஜாதா, என் அம்மா நேற்று ராத்திரி ஃபோன் செய்தாள்.  நான் சொல்ல மறந்து விட்டேன்.   நாளை தான் மார்கழி பிறக்கிறதாம்....."   படித்தவுடன்  மண்டைக்குள் தோன்றிய கேள்வி, "அப்ப எதுக்குடி கார்த்தால சீக்கரம் எழுந்து என்ன படாத பாடு படுத்திட்ட...."  கேட்கவில்லை.  காலை வேளை பரபரப்பில் கேட்க வேண்டாம், பின்னர் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மனம் விடவில்லை.   நாளை  அவளுக்கு முன் எப்படி எழுந்து கொள்வது என்று பல் வேறு திட்டங்களை யோசித்துக் கொண்டிருக்க...கொண்டிருக்க..."சட்டி சுட்டதாடா" பாடலில் ஒரு வரி வரும்.."பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதாடா....மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்தடா....."  பாதி மனதை ஆக்கிரமித்த மிருகத்தின் விளைவால் யாருக்கும் தோன்றாத திட்டம்....மிகவும் மோசமான, அல்பமான, நேர்மையற்ற, சொல்வதற்திக்கு லாயக்கில்லாத திட்டம் என் மனதில் தோன்றியது.  அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு என் கணவரின் ஒத்துழைப்பு தேவையானாதால் அவரை நாடினேன்.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் நீங்க?"

என்ன என்பது போல் பார்த்தார்.

சொல்வதற்கு தயக்கமாக இருந்தது.  ஆனாலும் சொல்லி தானே ஆகவேண்டும்.

"இன்னிக்கு ராத்திரி நான் இந்த ஹால் லைட்ட ஆன் பண்ணிட்டு படுத்துக்க போறேன்.  லைட் எறியறதேனு அணைச்சுடாதேங்கோ.."

"ஒழுங்கா தான இருக்க?"

முறைத்தேன்.  எழுத்த வீட்டு கதையை செப்பினேன்.

"இந்த லைட்ட போட்டு தூங்கறதெல்லாம்  டூ மச்.  உங்காத்துல இருந்தா இது மாதிரி பண்ணுவயா?"

"கட்டாயமா பண்ணமாட்டேன்.  எங்கப்பா பாவம்.  கரண்ட் பில் கட்டணும்.  அதனால எரிஞ்சுண்டு இருக்கற எல்லா லைட்டயும் அணைப்பேன்."

அவரிடமிருந்து ஒண்ணும் பேச்சு மூச்சில்லை.

"இன்னிக்கு ஒரு நாள் தானே. நீங்க ஊர்ல இல்லாத போ ராத்திரி 
லைட் போடுண்டு தானே தூங்குவோம் நாங்க..."

"இது வேறயா? இத்தனை நாள் சொல்லவே இல்லை?"

"லைட் போட்டுண்டா கொஞ்சம் தைரியமா....இப்ப அந்த கதை எல்லாம் எதுக்கு? இன்னிக்கு ஒரு நாள்..ப்ளீஸ்...."

"ஏதோ பண்ணிக்கோ..." போய்விட்டார்.

பண்ண தான் போறேன்.  லைட் போட தான் போறேன் என்று மனதோடு சொல்லிக் கொண்டாலும், தெய்வம் இருந்து பார்த்துக் கொண்ட மனது  முழுவதும் விளக்கை போட சம்மதிக்கவில்லை.  இந்த முடிவை மாற்றிக் கொண்டு விடலாம் என்னும் சமயத்தில் தான் மிருக மனது.."நீ என்ன வைரம், வைடூரியம்,மாணிக்கம், அது மாதிரியா கேக்கற...லைட் தான போட்டுக்கோ...நம்ம சந்தோஷத்துக்காக இது கூட பண்ணக் கூடாதா...." என்னை திசை மாற்றியது.

விளக்கு போடுவது என்று முடிவு செய்தேன்.  நாளை அவள் எத்தனை மணிக்கு எழுந்தாலும் என் வீட்டில் விளக்கு எறியும்.  அவளுக்கு முன்னால் நான் எழுந்து கொண்டேன் என்று அவள் நினைத்துக் கொள்வாள்.  அடடா.....

சந்தோஷத்துடன் என் பெண்ணை அழைத்துக் கொண்டு ஸ்கூல் பஸ் ஸ்டாப்பிற்கு போனேன்.  என் தோழியும் அங்கே இருந்தாள்.  

"சுஜாதா, நான் நேத்திகே சொல்லிருக்கணும்.  ஸாரி.  சொல்ல மறந்துட்டேன்..."

ஆதவன் சினிமாவில் நயந்தாரா  கழுத்தை சுளித்து  கொண்டு "இட்ஸ் ஒகே" சொல்வார், உங்களுக்கு நினைவிருகிறதா?   நானும்  கழுத்தை  அது போல் சுளித்துக் கொண்டு  "இட்ஸ் ஒகே..." என்றேன்.....

இனி அந்த முக்கியமான கேள்வி....."நீ நாளைக்கு தான மார்கழி ஆரம்பிக்க போற....இன்னிக்கு கார்த்தால நாலு மணிக்கு எல்லாம் உங்க வீட்டுல லைட் எரிஞ்சுதே...."

அவள் வாய் திறந்தாள். 

"என் ஹஸ்பெண்ட் ஊருக்கு போயிருக்கார்...."



No comments:

Post a Comment