உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல

"Autumn is a second spring when every leaf is a flower," என்றார் எழுத்தாளர் Albert Camus.  இலைகள் வண்ணம் மாறி ஊரே அழகாய இருக்கும்  இலையுதிர் காலத்தின் ஒரு நாள் மாலைப் பொழுது.  பள்ளிக்கூடத்தின் பார்க்கிங் லாட்டில் என் பெண்ணின் வருகைக்காக காத்திருந்த சமயம்.  அவள் வருவதற்கு மேலும் இருபது  நிமிடங்கள் ஆகும் என்று அறிந்தபின், அந்த பள்ளியின் பக்கத்தில் இருந்த பூங்காவில் கொஞ்சம் நடை பயில்வோம் என்று சென்றேன்... என்னை மறந்தேன்.  அந்த பூங்காவில் இருந்த மரங்களின் இலைகள் வாரித் தெளித்த மஞ்சள், சிகப்பு, ப்ரொளன், ஆரஞ்சு வண்ணங்கள்.....அப்பப்பா.... அழகை விவரிக்க எனக்கு தெரியவில்லை.  இதில் மரங்களின் நடுவே கண்ணாமூச்சி ஆடும் சூரியன் வேறு.  இந்த அழகை ரசித்துக் கொண்டே நடைபயில்வோம் என்று காதில் earphone மாட்டிக்ட்டிக் கொண்டு நடந்தால்....அந்த earphone வழியே வந்த பாடல், " உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல...." இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்( ஒரு முறை கூட பார்த்ததில்லை. பார்க்கவும் மாட்டேன்) ஏனோ அன்று கேட்கும் போது  மனதை ஏதோ செய்தது. கண்ணுக்கு ஏதிரே இருக்கும் இயற்கை அழகை விட உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று  நினைக்கையில் ....

எட்டிப் பார்த்த கடவுளை "நீதான் உசந்தவ்ன்னு எல்லாருக்கும் தெரியும்.  கொஞ்சம் விலகி நில்..மற்றவர்களைப் பற்றியும் என்னை யோசிக்க விடு" என்று தள்ளிவைத்து விட்டு யோசிக்கும் பொழுது முதலில் தோன்றியது.....

அப்பா:  ஆயிரம் கட்டுப்பாடுகள், ஆயிரம் விதிகள் என்று எக்கச்சக்க கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும், என் அப்பா இருக்கும் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி என் அப்பாவைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

அம்மா:  அப்பா இருக்கும் வரை அம்மாவின் அருமை தெரியவில்லை. இப்பொழுது அம்மாவின் அருமையைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. எங்கே தான் வருத்தப்ட்டால்   பெண்களும் வருத்தப்படுவார்களே என்று  தன் வருத்தத்தை காண்பிக்காமல் சிரித்த முகத்துடன் இருக்கும் என் அம்மாவைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்...

கணவர்:  ஏகத்துக்கு பொறுமை.  கோவம் என்றால் கிலோ என்ன விலை என்று உயர் குணங்களை கொண்டவருக்கு  நான் தகுதியாவனள் தானா என்று.  அப்பொழுதைக்கு அப்பொழுது தோன்றும்  என்னைப் போல் அவரும் பொறுமையற்று, கோவம் மிகுந்தவராய் இருந்திருந்தால் குடும்பம் கஷ்ட்டப்பட்டிருக்கும்.  என் குடும்பம் இன்று நன்றாய் இருப்பதற்கு காரணமான என் கணவரை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

குழந்தைகள்: இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு  "மை மாம் இஸ் த பெஸ்ட்" என்று என்னைக் கட்டிக் கொள்ளும் போது இந்த குழந்தைகளை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

மாமியார் மாமனார்:  எனக்கு கருச்சிதைவு ஆன நேரத்தில் ஏதோ காரணத்தினால் என் அம்மா என்னுடன் மருத்துவமனையில் இருக்க முடியாமல் போக, என்னுடன் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து என்னை கவனித்துப் பார்த்துக் கொண்டது என் மாமியார்....  சமையல் அறைக்குள் போக முடியாத அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் என் மாமியார் ஏதோ அவசர காரியமாக வெளியே சென்று விட, தான் சாப்பிடாமல், நான் பசித்து களைத்து இருப்பேன் என்று எனக்கு உணவு பரிமாறிவிட்டு பின் தான் உண்டார் என் மாமனார்.  இவர்களைத் விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

என் குடும்பம்: என் அக்காக்களும், அவர்களின் கணவரும். குழந்தைகளும், மாமாக்களும், மாமிக்களும், சித்தியும், பெரியப்பாவும்,அவர்களின் செல்வங்களும், அவர்களின் வாழ்க்கை துணையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது.  இவர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

என் கணவரின் குடும்பம்:  நான் நல்லவளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் குடும்பம் என்னிடம் நன்றாக தான் இருக்கும்.   ஆனால் என் கணவரின் குடும்பம்.. நாத்தனாரும், மச்சினரும், மாமாக்களும், மாமிக்களும், சித்திகளும், அத்தைகளும், அவர்களின் செல்வங்களும்,  அவர்களின் வாழ்க்கை துணையும்
என்னிடத்தில் உயிராய் இருப்பது பெரிய வரம்.  இவர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

தோழிகள்:  நான் ஒன்றும் நல்ல பெண் கிடையாது.  மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல் மனதில் இருப்பதை அப்படியே கோவத்துடன் கொட்டிவிடுவது என் இயல்பு. என் கோவத்தை சகித்துக் கொண்டு என்னை விட்டு போகாமல் என்னுடன் இருக்கும் என் தோழிகளைத் விட இந்த  உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

நண்பர்கள்:  போன மாதாத்தில் உலகம் me too me too  என்று அலறிக் கொண்டிருக்க.... வேண்டியதற்கும் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் அள்ளித் தரும் என்  நண்பர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.  அவர்கள் மூலம் நான் கண்டது ஆண்களின் உலகத்தை.  பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.  வம்பு தும்பு இல்லாமல், கோவத்தை carry forward செய்யாமல் அந்த கணத்துடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஏதும் நடக்காதது போல் இருக்கும் வித்தையை கண்டேன்.  பெண்கள் கூட்டத்தில் ஒரு ஆணின் மனோபாவத்துடன் இருக்கும் ஆற்றலை கற்று வருகிறேன். இந்த ஆற்றலைக் கற்று தந்த நண்பர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்....

வாசகர்கள்:  என்னைப் பொறுத்த வரை எழுதுவது மிகவும் கடினம்.   இல்லாததில் இருந்து ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும்.  பல நேரங்களில் எழுதுவதையே விட்டு விடலாமா என்று கூட தோன்றியது உண்டு.  அப்படி துவண்டு போகும் நேரத்தில் என்னை தூக்கி நிறுத்துவது என் வாசகர்களாகிய நீங்கள்.  உங்களில் பல பேரை எனக்கு தெரியாது.  ஆனாலும் என் எழுத்தைப் படித்து அவ்வப்பொழுது உங்கள் பாராட்டுகளை குறுஞ்செய்திகளாய் அனுப்பி...என் எழுத்தை எனக்கு உணரச் செய்த உங்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்றும் இல்லை.

என் கூற்றை ஒத்துக் கொள்வது போல் காற்று வீச "சர சர" என இலைகள் பறந்து கீழே விழுந்தன.


சிங்காரச் சென்னை

   அட...அட....சென்னைக்கு யுனெஸ்கொ அங்கீகாரம்... இது பெரிய அங்கீகாரம்.
 யுனெஸ்கொ அங்கீகாரம் வழங்கினாலும் சென்னையால் வளர்ந்த நாம் சென்னைக்கு அங்கீகாரம்....வேண்டாம்...சென்னையின் பல நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?  வெய்யில், மழை, கொசு, தூசி  என்று பல குற்றங்களை அடுக்கிக் கொண்டே
போவதை நிறுத்திவிட்டு, நாம் வாழ்வதற்கு தகுதியாக சென்னையில் என்ன இருக்கிறது என்று யோசித்தால்  அனேக விஷயங்கள் புலப்படும்.  எனக்கு புலப்பட்ட விஷயங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன். இதை படித்து விட்டு சென்னைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்.......  நினைப்பீர்கள். 

சென்னையின் தட்பவெப்பம்:

சென்னையில் வெப்பம் மட்டுமே இருக்கிறது என்று புலம்புகிறவர்களுக்கு... சென்னையில் வெப்பம் அதிகம் தான்.  பன்னிரெண்டு மாதங்களில் ஏதோ இரண்டு மூன்று மாதம் வெப்பம் குறைந்து காணப்பட்டாலும் மற்ற மாதங்களில் வெப்பம் அதிகம் தான்.  கொஞ்சம் புலம்புவதை நிறுத்தி விட்டு யோசிப்போம்.  நமக்கு குளிர் காலம் என்பதே இல்லை.  குளிரில் இருந்தால் தான்  வெய்யிலின் அருமை தெரியும்.  வருடம் முழுவதும் வெப்பம் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்பது வெப்பத்தில் வாடுபவர்களுக்கு புரியாது.  அழகாய் உடை அணிந்து ஒரு இடத்திற்கு போய் சேர்வதற்குள் வியர்வை ஆறாய் பெருகி எல்லாவற்றையும் நாசம் செய்கிறது என்று கூறுபவர்களுக்கு...வருடம் முழுவதும் உங்களுக்கு அழகாய் உடை அணிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  வியர்வை பட்டால் துவைத்து வெய்யிலில் மொட மொடவென்று காய வைக்கும் வசதி.....வருடம் முழுவதும் இருக்கிறது.  இந்தியாவில் குளிர் உள்ள மானிலத்தில் இருப்பவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அழகாய் உடை அணிந்து அதற்கு மேல் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ள வேண்டும்.  வெளியில் ஸ்வெட்டர் போடுவது போதாது என்று வீட்டில் வேறு ஸ்வெட்டர் அணிந்து கொள்ள வேண்டும்.  அதற்கும் மேலாக சிலீர் தண்ணீர். வெப்பமே இல்லாத வெய்யில்.  இங்கு எல்லாம் போய் இருந்து பார்த்தால், சென்னையின் அருமை புரியும்.  அடுத்த முறை வெய்யில் கொளுத்தும் போது அந்த சூரியனை அளவுக்கு அதிகமாக திட்டாமல்  மிதமாய திட்டுங்கள்.  முடிந்தால் நன்றி கூறுங்கள்.

சென்னையின் சூரியோதயம்:

காலையில் ஏழுந்து மளமளவென்று அன்றாட வேலையை துவங்குகிறோமே...என்றேனும் ஒரு நாள் இந்த சூரியோதயத்தின் நேரமும் சூரிய அஸ்தமனத்தின் நேரமும் எத்துணை பாங்காய் அமைந்திருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? அருணாசல் ப்ரதேஷ்ஷில்  "டாங்" என்ற இடத்தில் தான்  இந்தியாவின் முதல் சூரியோதயம்.  எத்தனை மணிக்கு தெரியுமா?  வெய்யில் காலங்களில் காலை நான்கு மணிக்கு.  சென்னையில் காலை நான்கு மணிக்கு சூரியன் உதித்தால்.....டண்டணக்கா.... தான்.  காலை நான்கு மணியில் இருந்து ஒட்டம் துவங்கிவிடும்.  அப்படி இல்லாமல நமக்காக அழகாய் ஐந்தே முக்காலில் இருந்து ஆறு மணிக்குள் வெய்யில் காலங்களில்  சூரியோதயம்.  இந்த டிசம்பர், ஜனவர் ஃபிப்ரவரியில் ஆறிலிருந்து ஆறைக்குள் சூரியோதயம்.  மிகவும் தாமதமாக ஏழரை மணிக்கு உதித்தாலும் கஷ்ட்டம் தான்.  இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவோமே தவிர சுறுசுறுப்பாய் இருக்க மாட்டோம்.  சென்னையை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாய இருப்பதற்கு காரணம் ஒழுங்கான சூரியோதயம் தான்.  அதே "டாங்"கில் குளிர் காலங்களில் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியுமா?  மாலை நான்கு மணி.  நான்கு முப்பது ஊர் இருட்ட ஆரம்பிக்கும்.  நமக்கும் மாலை நான்கு முப்பதிற்கெல்லாம் ஊர் இருட்டிவிட்டால்.....அண்டை மாநிலங்களில் கூட தான்  சென்னையைப் போல் சூரியோதயமும் அஸ்தமன்மும் இருக்கிறது என்பவர்களுக்கு....அங்கெல்லாம் குளிர் உண்டு.  இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க தோன்றுமே தவிர, சட்டென்று படுக்கையை உதறி தள்ளி விட்டு எழுந்திருக்க முடியாது.  நாம் சுறுசுறுவென்றும், துறுதுறுவென்றும் இருப்பதற்கு காரணம் அந்த சூரியன்.  நாளை காலை எழும் போது, பாங்காய் உதித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு சலாம் போடுங்கள்.

டிசம்பர் சீசன்:

இந்தியாவின் பல இடங்கள் குளிரில் இழுத்துப் போர்த்தி தூக்கத்தில் இருக்க, சென்னை மார்கழி மாதத்திற்கு தயாராகும்.   வண்ண வண்ண கோலங்கள்,   திருப்பாவை, திருவெம்பாவை,கூடவே வரும் கிறிஸ்துமஸ்,  பொங்கல், புளியோதரை ப்ரசாதங்கள்....  இது போதாதென்று களை கட்டும் ம்யூசிக் சீசன்.   அடடா.....நம்மைப் போல் டிசம்பர் மாதத்தை யாரும் கொண்டாடுவதில்லை.  டிசம்பர் மாதம் அருகில் வந்து விட்டது.  பெரிய பெரிய கோலங்களைப் பார்க்கும் பொழுது கோலம் போட்டவரை பாராட்டுவதுடன்,  சென்னைக்கும் ஒரு "ஓ" போடுங்கள்.

டிசம்பர் பூக்கள்:

ஏதோ படத்தின் பெயர் என்று நினைத்து விடாதீர்கள்.  நம் ஊரில் மட்டுமே டிசம்பர் மாதத்தில் பூக்கும் பூவின் பெயர்.  லெமூரியா கண்டம் என்று ஒன்று இருந்தது.  இப்பொழுது இல்லை.  அதே போல் நாம் கடைப் பிடித்த பல பழக்க வழக்கங்கள் லெமூரியா கண்டத்தைப் போல் அழிந்து விட்டாலும், சில இன்னும் மிச்சம் இருக்கின்றன.  அதில் ஒன்று தலையில் பூ சூடிக் கொள்வது.  இந்த " டெக்னிக்கலி அட்வாண்ஸ்ண்ட்" ஆன காலத்திலும் பல பெண்கள் பூ வைத்துக் கொள்வதை விரும்புகிறார்கள்.  மல்லியும், ஜாதியும், முல்லையும் காணக் கிடைக்காத டிசம்பர் மாதத்தில், டிசம்பர் பூ பூத்து நம் பெண்களை மகிழ்விக்கிறது.  அதுவும் பள்ளிக்கு செல்லும் குட்டி குட்டி "லட்டு"களின் பின்னலின் தொடக்கத்தில், வைலட் கலரில் எவ்வளவு அழகாய் டிசம்பர் பூக்கள்.   இதை படித்து சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு உங்கள் வேலைகளில் மூழ்கி விடாதீர்கள். டிசம்பர் பூவை பார்க்கும் சமயம்....அதே அதே .....ஒரு "ஓ" போடுங்கள்.



"த க்ரெட் லா ஆஃப் கர்மா" கேள்விப்பட்டிருக்கீர்களா?  வேண்டாம்...ந்யூட்டனின் மூன்றாவது தெரியுமா?...வேண்டாம்....நம் ஊருக்கு வருவோம். "வினை விதைப்பவன் , வினை அறுப்பான்...." நமக்கு மிகவும் தெரிந்த பழமொழி.  "ஊரெல்லாம் தண்ணி, ஒரே வெய்யில், என்ன ட்ராஃபிக், ராத்திரி முழுக்க ஒரே கொசு கடி" என்ற எதிர்மறை வாக்கியங்களை உதிர்த்துக் கொண்டிருந்தால், எல்லாம் எதிர்மறையாக தான் நடக்கும்.  அதை விடுத்து ஒரு நாளில் ஒரு நிமிடமோ ஒரு நொடியோ...சிரித்த முகத்துடன் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னைக்கு  நன்றி சொன்னால்...சொல்லிப் பாருங்கள்....

The Problem (Minute Movie)

A week ago I saw the movie "Secret Superstar".  Right from that time, I have been thinking .....I want to become a Secret Superstar too......Nooo....I have been thinking that why is there no such movie in Tamil.  Instead of depending on others to come up with a good movie, I decided I should make a good movie.....in the next century.  Great things start from small beginnings.  This movie is one such small beginning.   You may get to see more such movies in the future....Be scared...be very scared.  But don't worry....I will pray for your safety!!!