தாய் மண்ணே வணக்கம்

இரண்டு  மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, வெளிநாட்டிலிருந்து
விடுமுறைக்காக இந்தியா வரும் (என்னைப்  போல்) பெண்களின், உணர்வை வெளிப்படுத்தும் பதிவு இது.

என்ன தான் எங்களுக்கு சென்னை மேல ஒரு  சில gripe(current cut, traffic, கொசு)  இருந்தாலும்,சென்னைல இருக்கறவங்களுக்கு எங்க மேல ஒரு சில gripe (ஒரே பீட்டரு, ரொம்ப show)  இருந்தாலும்,  சென்னைல எப்ப கால் வைக்கப்போறோங்கற ஆசை இல்லாமையா இருக்கும்? நாலு அஞ்சு மாசம் முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி அது பாட்டுக்கு தூங்கிண்டு இருக்கும். நம்ம பயண நாள் நெருங்க நெருங்க, சுற்றம் மற்றும் நட்பின் "என்ன இந்தியா shopping ஆரம்பிச்சாச்சா ?" விசாரிப்போடு பயண ஏற்பாடுகள் இனிதே தொடங்கும். Wal-Mart,K-Mart,Target,Kohls,Bed Bath Beyondனு ஓவ்வொரு கடையா ஏறி இறங்கி, கடைசில Costco nuts&chocolateவோட நம்ம India Shopping முடியும்.   shopping முடிஞ்சுதுன்னு நினைச்சாலும், வீட்ட பூட்டிண்டு கிளம்பற வரைக்கும் எதவாது வாங்கிண்டு தான் இருப்போம்.  எல்லாத்தையும் பெட்டில அடைச்சு, weight பாத்து, carல ஏத்தி, Airport போய் Check-in பண்ணி, Husbandக்கு பிரியா விடை கொடுத்து,  திரும்பி திரும்பி பாத்து bye சொல்லி(அடாடாடா),
(A slight detour. USAலேந்து சென்னை கிளம்பும் போது முக்கால் வாசி, wife & kids தான் முதல்ல போவாங்க.  கணவர் பின்னாடி வருவாரு.  கணவர விட்டுப் பிரியர சோகம் இருந்தாலும், சென்னைல எல்லாரையும் பாக்கப் போற சந்தோஷம் அந்த சோகத்தை பாதியாக்கிடும்.  அதே சென்னைலேந்து திரும்ப US வரும்போது , என்ன தான் கணவர் கூட இருந்தாலும்…………..சரி விடுங்க, நல்ல விஷயம் பேசும் பொது, இது எதுக்கு.  கனி இருப்பக் இருப்பக் காய் கவர்ந்தற்று ) 
gateல  wait பண்ற நேரத்துல கணவருக்கு ஒரு பத்து தடவை phone அடிச்சு, ரசப் பொடி அந்த cabinetல இருக்கு, சக்கரை இந்த cabinetல இருக்கு அப்படினு  instructions குடுத்துண்டே இருக்கும்போது, "now boarding" கண்ல தெரிய, ஒரு வழியா phoneஅ  cut பண்ணிட்டு flightக்குள்ள  போய் அப்பாடான்னு  உக்காருவோம்.  சென்னைல எல்லாரையும் பாகப்போறோம்னு குதூகலம் ஒரு பக்கம், இங்க இவர  தனியா விட்டுட்டு போறோமேன்னு வருத்தம் ஒரு பக்கம்.  இப்படி இரு தலை கொள்ளி எறும்பா நம்ம தவிச்சுண்டு இருக்கும்போது,  air-hostess பெண்மணி அவர்கள்  வந்து "பெல்ட்ட போடு,   சீட்ட முன்னாடி தள்ளு" அப்படினு ரொம்ப இம்சை பண்ணுவாங்க.  நம்ம உடனே "chandramukhi" வடிவேலு styleல "எங்களுக்கும் தெரியும், நாங்களும் விமானத்துல பயணம் செஞ்சுருக்கோம்" அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிண்டே பெல்ட்ட போட்டுப்போம்.   விமானம்  மெதுவா மேலே கிளம்ப ஒரு  உணர்வும் இல்லாம மனசு வெறுமையா இருக்கும்.  பசங்களோட நை-நை நச்சரிப்பு, இம்சை  அரசிகளின்  அன்புத் தொல்லை,இது ரெண்டுத்தையும் மீறி  கொஞ்சம் தூங்கி எழுந்தா, நம்மளோட Transit Ariport  வந்திருக்கும்.  rigorous security check  தாண்டி, சென்னை விமானம் கிளம்பும் gateக்கு வந்தா………………………….பாதி சென்னை வந்த மாதிரி தான். எல்லா
இடத்திலையும் நம்ம  தமிழ் மக்கள் தான், நம்ம தமிழ் தான். ( இதுல exception கொஞ்சம் ladies. born with a sliver spoon  மாதிரி, born with english tongue அவங்கள்லாம். கார்த்தால பல்  தேய்க்கரதுலேந்து, ராத்திரி பாத்திரம் தேய்க்கரவரைக்கும் English தான்.) ரயில் சிநேகம் மாதிரி இங்க விமான சிநேகம்.  அங்கங்க ஒரே தமிழ் உரையாடல்கள் தான்.

                      "நாங்க Bostonலேந்து வரோம். நீங்க எங்கேந்து ?"

                      "திரும்ப 6 மணிக்கு trichy flight. புடிச்சுடுவோம்  இல்ல?"

                     "அழாதடா.  இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி தாத்தலாம் பாக்க போறோமே."

                     "என் நாத்தனாரோட மச்சினர் மாட்டுப்பொண்ணு Chicagoல தான் இருக்கா."

இப்படி இன்ப தேன் வந்து பாயும் நம்ம காதினிலே.  தேனெல்லாம் நல்ல தொடைச்சுட்டு , சென்னை விமானத்துல ஏறி ஒக்காந்தா……. here we go again, இம்சை அரசி - Part II.  இந்த flightல ரொம்ப தூக்கம் வராது.  வயத்துக்குள்ள என்னவோ ஒண்ணு  சுத்திண்டே இருக்கும்.  ஒரு வழியா நம்ம flight சென்னைய  நெருங்கும்.

              "நமது விமானம் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும்", என்ற குரல் காதில் விழ, வயிற்றில் சுழன்று கொண்டிருந்த அந்த ஒன்று, உருண்டை வடிவம் பெற்று  நம் தொண்டை குழியில் வந்து சிக்கும்.  விமான ஜன்னலின் வழியே  மீனம்பாகம் விமான நிலையத்தின் மஞ்சள் விளக்குகள் பளிச் பளிச் என்று மின்னுவது தெரியும்.  விமானம் ஓடுகளத்தில் ஓடிவிட்டு மெல்ல தன் இடத்தில் வந்து நிற்கும்.

      "தற்போது நமது விமானம் சென்னை  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது……" என்று ஏதேதோ ஒலி பெருக்கி வழியே வர, அதை காது குடுத்து கேட்கும் நிலையில் எவரும் இருக்க மாட்டார்கள்.  தூக்க கலகத்தையும் மீறி எல்லோர் முகத்திலும் ஒரு பரபரப்பும்,  ஒரு சிறு சந்தோஷமும் ஒட்டிக் கொண்டிருக்கும். கொண்டு வந்திருந்த சுமைகளை எடுத்துக் கொண்டு  ஒவ்வொருவராக அடித்துப் பிடித்துக் கொண்டு நகர, அவர்களுக்கு எல்லாம் வழிவிட்டு குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் மெதுவே விமானத்தின் வாசல் வர, விடிந்தும் விடியாத சென்னையின் காலை பொழுது கண்களுக்கு விருந்தாகும். தொண்டையில் சிக்கிய உருண்டை மெல்ல கரையத் தொடங்கி கண்களில் கண்ணீராய் தேங்கும் . வாசலை விட்டு  முதல் படியில் நம் கால் பதிய, சென்னையின் வெப்பம்  நம்மை ஆரத் தழுவிக் கொள்ளும்.  ஒவ்வொரு படியாக நாம் இறங்க, கண்களில் முட்டிக் கொண்டிருக்கும் கண்ணீர், துளித் துளியாக கன்னங்களில் விழும்.  கடைசிப் படி முடிந்து, சென்னை மண்ணில் கால் பதிய, கண்ணீர் மொத்தமும் அருவியென வழிந்தொடும். "இது தான் என் இடம்" என்று மனம் அரற்றும். "I missed you Chennai, I missed you a lot" என்று  ரகசியமாக பிதற்றும்.  இந்த சில நொடிப் பொழுதுகள் வாழ்வின் மிக உன்னதமான தருணங்கள்.

சென்னையில் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், மனதாலும், நினைவாலும் எப்பொழுதும் தாய் நாட்டையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் நம் தாய் மண்ணில் காலடி படும்போதும் "இந்திய நாடு என் வீடு,  இந்தியன் என்பது என் பேர்" என்ற உணர்வைக் கொடுக்கும் என் தாய்மண்ணே, உனக்கு வணக்கம்.








2 comments:

  1. kalakeeteenga! I miss chennai.. Eppa vey poganum pola irukku. :-(

    ReplyDelete
  2. v.nice suja, touching. I felt that everytime when i travel from US to chennai. sollatheriyadhu. Nee romba azhaga sollite. But ippo adhukku thevayeillai, i am enjoying chennai each and every day.

    ReplyDelete