ஒபாமாவும்....

"சுஜாதா, அமெரிக்காவில் உங்கள் வீடு எங்கு இருக்கிறது?"

"வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கூப்பிடு தூரத்தில்."

"அடிக்கடி வாஷிங்டன் டி.சி. சென்றிருப்பீர்களோ?"

"அடிக்கடி என்று சொல்லவதற்கில்லை.  ஆனால் பல முறை சென்றிருக்கிறேன்."

"வாஷிங்டன் டி.சியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?"

"செர்ரி ப்ளாஸம் பார்ப்பதற்காக முதல் முதலாய வாஷிங்டன் டி.சி. சென்றோம்.  அந்த செர்ரி மரங்களை வேடிக்கை பார்த்தபடியே நாங்கள் நடந்து கொண்டிருக்க, திடீரென்று தூரத்தில் ஒரு கட்டிடம் என் கண்ணில் பட்டது.  கண்ணில் பட்ட முதல் நொடியிலேயே மனதிலும் பட்டது.  அன்று முதல் இன்று வரை அந்த கட்டிடம் என்னை வியப்பில் ஆழ்த்துவதில் தவறில்லை.  பலமுறை இரவிலும், பகலிலும் அந்த கட்டிடத்தைப் பார்த்திருக்கிறேன்.   முதன் முதலில் பார்த்தபொழுது எப்படி என்னை வியப்பில் ஆழ்த்தியதோ அதே போல் ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்தும்.  அதையும்  தவிர முக்கியமான விஷயம், வரலாற்று பக்கமே தலை வைத்து படுக்காத என்னை, வரலாற்றின் மேல் காதல் கொள்ள வைத்தது அந்த கட்டிடம்.  எதற்காக, எப்படி இந்த கட்டிடத்தை கட்டினார்கள் என்று படிக்க தொடங்கி, அமெரிக்காவின் வரலாற்றை ஏனோ தானோ என்று படித்துவிட்டு, இன்று இந்தியாவின் வரலாற்றை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த கட்டிடம்......"U.S. Capitol."

"வெள்ளை மாளிகையைப் பற்றி....?"

"அமெரிக்கா வந்த புதிதில் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அப்பொழுது அதிபர் புஷ் ஆட்சியில் இருந்தார்.  அன்று வெள்ளை மாளிகை என்னை பெரிதாய் ஈர்க்கவில்லை.   அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் வாஷிங்டன் டி.சியின் மேல் இருந்த காதல் பன்மடங்காயிற்று."

"அதிபர் ஒபாமா வந்த பிறகு வெள்ளை மாளிகை சென்றிரீர்களா?"

"இல்லை.  உள்ளே செல்லவில்லை.  ஆனால் பலமுறை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன்.  அப்பொழுது எல்லாம் நமக்கு பிடித்த ஒருவர் உள்ளே இருக்கிறார் என்று தோன்றும்.   வெள்ளை மாளிகையின் அருகே ஒரு பெரிய புல்வெளி ஒன்று உண்டு.  அங்கு உட்கார்ந்து சாப்பிடுவதற்கு என்று பிக்னின் டேபிள்(கள்) உள்ளன.   வீட்டிலிருந்து புளியோதரையும், தயிர் சாதமும், ஊறுகாயும் எடுத்துக் கொண்டு, அந்த டேபிள்களில் உட்கார்ந்து கொண்டு வெள்ளை மாளிகையைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது ஒரு சந்தோஷம்."

"U.S. Capitol உள் சென்றிருக்கிறீர்களா?

"U.S. Capitol. ஏரோப்ளேன் போல்.  வெளியிலிருந்து பார்க்கும் இன்பத்தைப் போல் உள்ளே அவ்வளவு இன்பம் இருக்காது.   U.S. Capitol முன்பு ஒரு பெரிய மைதானம் இருக்கிறது.  குழந்தைகளுடன் விளையாடலாம்.  நடை பயிலலாம்.  எலும்மிச்சம்பழ சாதமும், உருளைக் கிழங்கு ரோஸ்ட்டும் சாப்பிடலாம்.  அங்கு சதா சர்வ காலமும் ஹெலிகாப்ட்டர்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  கருப்பு, நீலம், பச்சை, சிகப்பு என பல வண்ணங்களில் ஹெலிகாப்ட்டர்கள் இருக்கும்.  அதை பார்க்கும்பொழுது எல்லாம் இதற்குள் அதிபர் ஒபாமா இருப்பாரா என்று பலமுறை நான் நினைத்ததுண்டு."

"அதிபர் ஒபாமா மேல் அப்படி என்ன ஈர்ப்பு?  அவர் உங்களுக்கு என்ன நல்லது செய்தார்?"

"அவர் நல்லது செய்தாரா என்று எனக்கு தெரியாது.  தீயது ஏதும் செய்யவில்லை.  எனக்கு யானை மிகவும் பிடிக்கும். யானை எனக்கு என்ன செய்தது?  கடல் அலை பிடிக்கும். அலை எனக்கு என்ன செய்தது? யாரைப் பார்க்கும் போது என் மனம் பூத்துக் குலுங்குகிறதோ,  அவர் எனக்கு ஏதாவது செய்து தான் ஆக வேண்டும் என்றில்லை.  ஒபாமாவை நான் அதிபராய் பார்த்த நாட்கள் குறைவு.  நல்ல கணவராய், நல்ல தந்தையாய் பார்த்த நாட்கள் தான் அதிகம்."

"அவர் நல்ல கணவராய் இருப்பதில் உங்களுக்கு என்ன லாபம்?"

"பெண்களை மதிப்பவரால் மட்டுமே நல்ல கணவராய் இருக்க முடியும்.  பெண்களை அவர் மதித்தால், பெண்களும் அவரை மதித்தார்கள்.  ஆட்சியில்  பெண்ணகளால் தொல்லை இல்லை.  அவ்வாறு அல்லாமல் பெண்களைப் பற்றி வாய்க்க்கு வந்தபடி பேசுபவர் ஆட்சி.......ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இனி சிரித்த முகத்துடன் இருக்கும் அதிபரும் இல்லை, மக்களும் இல்லை."

"மிஷல் ஒபாமா பற்றி....."

"நானும் என் பெண்ணும் மிஷல் ஒபாமாவின் பரம விசிறி.  என்ன படிப்பு, என்ன உடை, என்ன பேச்சு....அவரைப் பார்த்த பின் தான் நாம் படிக்காமல் போனோமே என்று எண்ணி வருத்தப்பட்டிருக்கிறேன்.  அதிபரின் மனைவி என்று பொம்மை போல் இல்லாமல், தன்னால் இயன்ற நன்மையை செய்திருக்கிறார்.  என் மீது அவரின் தாக்கம் எவ்வளவு என்றால் சில நாட்கள் முன் என் மகளிடன் என்னையும் அறியாமல் ஒன்று கூறினேன்.  "பெண்ணே ஒழுங்கா சாப்பிடு.  இனிமே நல்லது எது என்று சொல்வதற்கு மிஷல் ஒபாமா கிடையாது." நான் சொல்லி முடித்த பின் எங்கள் இருவர் கண்களும் கலங்கியது உண்மை. ஒபாமாவின் வெற்றிக்கு முழு முதல் காரணம் மிஷல் ஒபாமா தான்.  நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம்."

"நேற்று inauguration பார்த்தீர்களா?"

"ஒபாமாவும், மிஷல் ஒபாமாவும் இருக்கும் வரை பார்த்தேன். அவர்கள் பறந்து போன பிறகு எல்லாம் போனது.  எதையும் பார்ப்பதற்கு mood இல்லை."

"சுஜாதா,  இந்த பதிவை ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாமே?"

"சிரிப்புக்கும். கிண்டலுக்கும் ஆங்கிலம் உதவும்.  மனதை சொல்வதற்கு என் தாய்மொழியைத் தவிர வேறு ஏதும் உதவாது."

"கீழே இருக்கும் வீடியோவிலும் தமிழ் பாட்டு தான் உபயோகிதிருக்கிறீர்கள்?"

"ஆம். அந்த பாட்டில் நான் ஊறி திளைத்திருக்கிறேன்.  எந்த ஆங்கில பாட்டிலும் அது போன்று வார்த்தைகள் இல்லை."

"வாஷிங்டன் டி.சி. போவீர்களா?"

"போவேன்.  U.S. Capitol. பார்க்க போவேன்."

"வெள்ளை மாளிகை...."

"இனிஅது வெறும் மாளிகை. "










மெரினாவும்.....

"சுஜாதா, சென்னையில் உங்கள் வீடு எங்கு இருக்கிறது?"

"மெரினாவிலிருந்து கல்லெறி தூரம்."

"அடிக்கடி மெரினாவிற்கு சென்றிருப்பீர்களோ?

"அடிக்கடி சென்றதாய் நினைவு இல்லை.  ஆனால் சிறுவயதில் பலமுறை சென்றிருக்கிறேன்."

"மெரினாவைப் பற்றி உங்கள் நினைவுகளை சொல்ல முடியுமா?"

"எங்கள் வீட்டிலிருந்து கடற்கரை சாலைக்கு வந்தால் இருப்பது விவேகானந்தர் பீச்சு.  விவேகானந்தர் நினைவு இல்லம் இருப்பதால விவேகானந்தர் பீச்சு. அதிலிருந்து வலது பக்கம் ரெடியோ பீச்சு.   சென்னை வானொலி நிலையம் இருந்ததால் ரெடியோ பீச் என்று பெயர் காரணம் வந்தது.  கலங்கரை விளக்கம், காந்தி சிலை எல்லாம் ரெடியோ பீச்சில் இருக்கிறது. இடது பக்கம் மெரினா பீச்சு.  அதையும் தாண்டி போனால் கல்லறை பீச்சு. "

"ஆக, கலங்கரை விளக்கம் இருக்கும் ரெடியோ பீச்சில் தான் கூட்டம் அதிகம் இருக்குமோ?"

"இல்லை. கலங்கரை விளக்கம் முன்பு செயல்பாட்டில் இல்லை.  பூட்டிக் கிடந்தது. மெரினாவில் தான் கூட்டம் அதிகம்.  முன்பு மெரினாவின் மணல் வெளியில் கடைகள் இருந்தன.  அந்த கடைகளுக்கு ஆகவே மெரீனாவில் கூட்டம் வரும்.  அந்த கடைகளைப் பார்ப்பதே தனி சந்தோஷம்.   தலைக்கு போட்டுக் க்ளிப்பிலிருந்து துணி உலர்த்தும் க்ளிப் முதற்கொண்டு எல்லா விதமான பொருட்களும் அங்கு கிடைக்கும்.  பின் அந்த கடைகள் அகற்றப்பட்டன."

"ஏன்?"

"கடற்கரையை மாசுபடுத்துவதால் அந்த கடைகள் அகற்றப்பட்டன.  இப்பொழுது அங்கு சிலைகள் இருக்கின்றன. ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து போனேனே....அங்கு கடற்கரை மணல்களில் ஊற்றுக் கிணறுகள் இருக்கும்.  தண்ணீர் பஞ்ச நாட்களில் அந்த கிணறுகள் தான் தண்ணீர் தந்தன.  கடல் தான் தண்ணீர் உப்பாய் இருக்க, அந்த கடலிலிருந்து சற்று தொலைவில் இருந்த இந்த கிணறுகளில் தண்ணீர் பளிங்கு போல் இருப்பதுடன் கற்கண்டாய் இனிக்கும்.  அதெல்லாம் ஒரு காலம்."

"கடைசியாய் எப்பொழுது மெரினாவிற்கு சென்றீர்கள்?"

"நினைவில் இல்லை.  ஆனால் இப்பொழுது போக வேண்டும் போல் இருக்கிறது.  அங்கு சென்று ஜல்லிக்கட்டிற்காக மத வேறுபாடின்றி இணைந்திருக்கும் இளைஞர்களை காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது."

"நீங்கள் இப்பொழுது சென்னையில் இருந்தால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பீர்களா?"

"தெரியவில்லை. கலந்து கொள்ளாவிட்டாலும், சென்று கண்டு விட்டு வந்திருப்பேன்.  வந்தபின் உணர்ச்சி குவியலாய் இருந்திருப்பேன்.  அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்திருப்பேன்.  என் வாழ்வில் இது போல் ஒரு எழுச்சியை பார்ததில்லை என்று மகிழ்ந்து இருப்பேன்."

"அங்கு அவரவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, நீங்கள் வெறும் சென்றிருப்பேன், கண்டிருப்பேன், மகிழ்ந்திருப்பேன் என்று சொல்வது உங்களுக்கே அழகாய் இருக்கிறதா?"

"அழகாய் தான் இல்லை.  என்ன செய்வது? இருப்பது எங்கேயோ.  என்னால் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், இந்த அரசு ஒன்று செய்ய வேண்டும்.  அரசர் காலத்தில் கல்வெட்டு எழுப்பினாற் போல் இப்பொழுது இந்த மெரினாவில் ஒரு கல்வெட்டு எழுப்ப வேண்டும்.  2017 ஆம் ஆண்டு, தை மாதத்தில் ஏறு தழவதல்  விளையாட்டை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இங்கு இளைஞர்களின் அமைதிப் போராட்டம் நடந்தது என்று அந்த கல்வெட்டில் பதிக்க வேண்டும்.  வருங்காலம் அதை உணர வேண்டும்."

"பாரதியார் பாடலில் வரும் வாய்ச்சொல்லில் வீரர் நீங்கள் தான் போல் இருக்கிறது?"

"இருக்கலாம்."

"நீங்கள் கூறியது போல் அப்படி ஒரு வேளை அங்கு கல்வெட்டு எடுத்தால், கட்டாயமாக அந்த கல்வெட்டுடன் ஒரு செல்ஃபி எடுத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், சரி தானே?"

"தெரியாது.  இப்பொழுது இருக்கும் மன நிலையில் செல்ஃபி பற்றி சிந்திக்க முடியவில்லை."

"ஏன்?"

"எனக்கு இன்னொரு வீடு இருக்கிறது......"


                                                                                              .......தொடரும்.







யாம் பெறும் சன்மானம்

அது ஒரு சின்ன நகரம்.  அந்த நகரத்தில் கண்ணனின் கோவில் ஒன்று இருந்தது.  ஒரு மாலை வேளையில் அந்த கோவிலை நோக்கி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.  நெற்றியில் திருமண் காப்பு, அரையில் பஞ்சகச்சம், வலது கையில் கைத்தடி.  அவரின் இடது கை, அவருடன் வரும் சிறுமியின் கைகளைப் பற்றியிருந்தது.  அந்த சிறுமிக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கலாம்.  அந்த முதியவரின்  பேத்தி அவள்.  அவளுடைய அப்பா தாத்தாவுடன் துணையாக கோவிலுக்கு செல் என்று  பணிக்க, அப்பாவின் வார்த்தையை மீற முடியாமல், தோழிகளுடன்  விளையாடுவதை துறந்து இதோ கோவிலுக்கு வந்திருக்கிறாள்.  தாத்தவுடன் கோவிலுக்குள் நுழைய, கோவிலை விட்டு வெளியே செல்பவரைப் பார்த்து, "எப்பொழுது இது போல் நாமும் கோவிலை விட்டு வெளியே வருவோம்" என்று அவள் மனம் ஏங்கிற்று.  அங்கே கோவிலுக்குள் ஒரு மண்டப்த்தில் சிலர் திவ்ய ப்ரபந்தம் சேவித்துக் கொண்டிருக்க,  அவளின் தாத்தாவும் அவர்களுடன் சென்று கலந்து கொண்டார்.  அவளும் தாத்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். இனி அரை மணி  நேரமோ, ஒரு மணி நேரமோ, அவர்கள் முடிக்கும் வரை இங்கு அமர்ந்திருக்க வேண்டும். அவளுக்கு அழகை பொத்துக் கொண்டு வந்தது.  அங்கே எழிலாய் வீற்றிருக்கும் கண்ணனைப் பார்க்காமல், கோவிலை விட்டு வெளியே செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இது ஒரு நாள் கூத்து அல்ல.  பல நாள் அவள் தாத்தாவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  ஆனால் ஒரு நாளும் அவள் பார்வை கண்ணன் மேல் படவில்லை.

காலம் கடந்தது.  அவள் திருமண வயதை அடைந்தாள்.  அவள் பெற்றோர்கள் நல்ல கணவனாய் பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.  கணவனோ கண்ணனின் மேல் அபார பக்தி கொண்டவர்.  கிடைக்கும் நேரத்தில் கோவிலுக்கு போவார் இல்லை என்றால் கண்ணன் பற்றிய சொற்பொழிவு கேட்க போவார்.  அது அவளுக்கு போவதில்லை. திருமணமான புதிதில் மனைவியுடன் காலம் கழிக்காமல் கதை என்ன வேண்டியிருக்கிறது என்று அவர் போவதை தடுத்தாள்.  அவளுடன் சண்டையிட்டு அவர் தன் விருப்பத்திற்கேற்ப நடந்திருந்தால், இன்று அவள் நிலமை மோசமடைந்திருக்கும்.  அவ்வாறு இல்லாமல்,  அவர் அவளின் சொல் கேட்டு கதைகளுக்கு போவதை நிறுத்திக் கொண்டார்.  அவளும் சந்தோஷமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அவள் ஆடும் ஆட்டதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், அவள் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.  அவர் முடிவு செய்த வேளையில் அவள் சூலுற்றாள்.  அவள் சந்தோஷத்தில் திளைப்பதற்குள், கரு கலைந்தது.  மரணத்தை தொட்டுவிட்டு வந்தாள்.  புனர் ஜென்மம் எடுத்து ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் கருவுற்றாள்.  இந்த முறை ஏதும் விபரீதம் நடந்து விட கூடாது என்று தவித்தாள்.  தவித்த வேளையில் கண்ணனை நினைத்தாள். கோவிலுக்கு சென்றாள்.   தன் கணவனை சொற்பொழிவுகளுக்கு செல்ல கூடாது என்று தடுத்த அவள், இதே போல் ஒரு மார்கழி மாதத்தில், கண்ணனைப் பற்றிய சொற்பொழிவு நடக்கும் அரங்கத்திற்கு சென்றாள். முப்பது நாட்கள் விடாமல் கண்ணன் கதைகளை கேட்டாள். ஆண் குழந்தையைப் பெற்றாள்.  கதைகள் கேட்டதன் பயனாக கண்ணனை உணர்ந்தாள்.  அவளாய்  தேடி சென்றிருந்தாலும் கண்ணனை உணர்ந்திருக்க மாட்டாள்.  இது அவனாக பார்த்து அவளுக்கு அளித்த சன்மானம்.  மிகப் பெரிய சன்மானம்.

இன்று காலை "திருப்பாவை" பாடலை பாடியபோது, அவள் பெற்ற சன்மானத்தின் கதை அவள் மனதில் ஒடியது.  கண்ணனை நினைத்து கை கூவித்தாள். அடுத்த இரண்டு நொடியில் அமெரிக்க அதிபரை பற்றி படிக்க சென்றுவிட்டாள்.   பின்னர் அவள் மனம் கவர்ந்த தலைவரைப் பற்றிய செய்தி வர, அதை படித்தாள். இப்படியாக கண்ண்னை விட்டு தாவி, தாவிச் சென்று எங்கேங்கோ சுற்றினாலும், கண்ணனிடமே திரும்பி வருவாள். அவள் வராவிட்டாலும் அவன் வரவழைத்துக் கொள்வான்.