அம்பு படுக்கை

இது பீஷ்மரின் கதை அல்ல.  என் அப்பாவின் கதை.  பீஷ்மரைப் போல் என் அப்பாவும்   "விரும்பும் போது செல்லும்" வரம் பெற்றிருந்தாரோ என்னவோ, தெரியவில்லை.

எண்பத்து மூன்று வயது வரை மருத்துவமனை சென்றறியாத என் அப்பா, சர்க்கரை நோயால் இருதயம் பாதிக்கப்பட்டு முதன் முறையாக 19-4-2014 சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் சி.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார்.   உலகம் சுற்றுவது நின்று போனது.  புலன்கள் வேலை செய்ய மறுத்தது. வயிறு சுருட்டி சுருட்டி பிசைந்தது.  தெரிந்த தெய்வங்களை மனம் வேண்டியது. தெய்வம் வேண்டுதலுக்கு செவி சாய்த்தது.  என் அப்பா நலம் பெற்று வருகிறார் என்றும், இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் என்றும் செய்தி வந்தது.  "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டாலும்,  அப்பாவை விட்டு தொலை தூரம் இருப்பது வேதனையாய் இருந்தது. இந்தியா செல்வதா, வேண்டாமா என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்த போது,  22-4-2014, மாலை 4.30 அப்பாவின் உடல் நிலை மிகுந்த கவலைக்கிடம் என்று செய்தி வந்தது.  போட்டது போட்டபடி இந்தியா கிளம்பியாகிவிட்டது.   இரவு 9.00. விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில், அப்பாவின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ள, நடுக்கத்துடன் தொடர்பு கொண்டபோது,  அப்பா நினைவிற்கு வந்துவிட்டார், கவலைக் கொள்ளாமல் வா என்று அக்கா சொன்னாள்.  இப்பொழுது யோசித்து பார்க்கும் போது,  நாங்கள் வேண்டி பேசிய அதே தெய்வத்திடம் எங்கப்பாவும் பேசியிருக்க வேண்டும்.

"ஹே கிருஷ்ணா, உடல் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.  என்னால் இருப்பதற்கு முடியவில்லை.  எனினும் என் பெண்கள் இருவர் வெளி நாட்டில் இருக்கிறார்கள்.  அவர்களைப் பார்க்காமல்  நான் வருவதற்கில்லை. அதையும் தவிர, அவர்கள் வரும்பொழுது நான் இல்லை என்றால், அவர்கள் நொறுங்கி விடுவார்கள். அதனால் அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வருகிறேன்."

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கார் என்று அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. விமானம் சென்னையில் தரையிரங்கியபோது, எப்பொழுதும் விமான நிலையத்தில் எங்கள் வருகைக்காக காத்திருக்கும் அப்பா அன்று இருக்க மாட்டார் என்ற உண்மை முகத்தில் அடித்தது.  மருத்துவமனையில் அவரைப் பார்ப்பதற்காக, காத்திருந்தபோது, மனம் தெய்வத்தை திட்டியது: "ஏன் பார்த்தசாரதி, உன் கோவிலுக்கு தானே ஓடி ஓடி வந்தார்.  உன் கோவிலின் எல்லா திருமஞ்சனத்துக்கும் வேதம் சேவிப்பதை தானே உயிராகக் கொண்டிருந்தார்.  அவரைப் போய் இப்படி படுக்க வைச்சுட்டயே…." திட்டி முடிக்கும் முன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

படபடக்கும் இதயத்துடன், சி.சி.யூவின் கதவை திறக்க, அங்கே நிலவிக் கொண்டிருந்த அசாதாரணமான் அமைதி வயிற்றை பிசைந்தது.  எக்காரணம் கொண்டும் அவர் உணர்ச்சி வசப்படக்கூடாது என்பதால், அவரைப் பார்த்து நான் அழுவது அறவே கூடாது என்று எனக்கு உரைக்கப்பட்டிருந்தது. மகளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.  "ராமானுஜா, அவரைப் பார்த்து உடைந்து அழாமல் இருக்கும் வரத்தைக் கொடு," என்று முறையிட்டபடி நகர்ந்தேன்.  முதல் படுக்கையில் யாரும் இல்லை.  இரண்டாவது படுக்கையில் ஏதோதோ கருவிகளின் துணையோடு ஒருவர் படுத்திருக்க "இதுவா என் அப்பா" என்று பயந்தபடியே, பக்கத்து படுக்கையை பார்க்க, மனம் துள்ளிக் குதித்தது. என் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். நான் பார்க்கவும், அவரும் என்னை பார்க்கவும் சரியாக இருந்தது.  அருகே சென்றேன்.  முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப் பட்டிருந்தது.  அவர் உடம்பில் வேறு எங்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க தைரியமில்லை.  என் அப்பா பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்க போகிறார் என்று கற்பனை செய்து கொண்டு வந்திருந்த எனக்கு, உட்கார்ந்திருந்த என் அப்பாவைப் பார்த்தவுடன் சந்தோஷம் பொங்கியது.  என் அப்பாவிற்கும் என்னைப் பார்த்ததில் சந்தோஷம் என்று அவர் முகத்தைப் பார்த்து தெரிந்தது.  முகத்தில் பொருத்திய மாஸ்க்கை நீக்கிவிட்டு என்னுடன் பேச ஆரம்பித்தார்/


"எப்படி வந்த?"

"இன்னிக்கு தான் பா."

"நான் தான் வரவேண்டாம்னு சொன்னேனே.  ஏன் வந்த?"

"சும்மா தான் பா."

"இங்க வா மா," என்று என் பெண்ணை அருகே அழைத்தார்.  அவள் அருகே செல்ல, அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.

"அவனைக் கூட்டிண்டு வரலையா?" என்று நான் அமெரிக்காவில் விட்டு விட்டு வந்த என் பதினான்கு வயது மகனைப் பற்றி கேட்டார்.

"இல்லப்பா, அவன் டெஸ்ட் நடந்துண்டுருக்கு.  ஸ்கூல் லீவு போட முடியாது."

நான் அவனை விட்டுவிட்டு வந்தது தப்பு என்பது போல், தலையை அசைத்தார்.

 "அங்க இருக்கற ஸிஸ்ட்டர கூப்பிடு," என்றார்.

எனக்கு சற்றுத் தொலைவே,  ஒரு மேஜையருகே மூன்று தாதிகள் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

"மேடம், அப்பா உங்கள கூப்படறாங்க."  மூவரில் யாரைக் கூப்பிடுவது என்று தெரியாமல் பொதுவாய்
கூப்பிட்டேன்.

மூவரில் இரண்டு பேர் என் அப்பா படுத்திருக்கும் படுக்கை அருகில் வந்தார்கள்.

"என்னப்பா வேணும்?"  என்று ஒரு தாதி கேட்டாள்.  அவள் "என்னப்பா" என்றதில் அன்போ பாசமோ ஏதோ தெரிந்தது.

"  நேத்துக்கு வந்தது என் இரண்டாவது பொண்ணு. இது என் மூணாவது பொண்ணு. அமெரிக்காலேந்து வந்திருக்கா. வரவேண்டாம்னா கேக்கலை. ……"என்னைப் பற்றி அந்த தாதிகளுக்கு சொல்லப்பட்டது.

என்னைப் பற்றி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேனே தவிர, என் அப்பாவைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அந்த நேரம் எனக்கு தோன்றவில்லை.  சொல்லி இருக்க வேண்டும்.  உலகத்தில் உள்ள அப்பாக்களில் என் அப்பாவைப் போல் சிறந்தவர் யாரும் இல்லை என்று நான் சொல்லி இருக்க வேண்டும்.  என் அப்பாவின் உலகம் அவரின் மூன்று மகள்கள் மட்டுமே என்று உரைத்திருக்க வேண்டும்.  இன்று என் அப்பா உறங்குகிறாரா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அன்று நாங்கள் சிறுமிகளாக இருந்த போது , நாங்கள் வயிற்று வலி, கால் வலி, பல் வலி, தலை வலி,  இருமல் என்று எந்த நொடியில் தட்டி எழுப்புவோம் என்று காத்திருந்தபடியால், என் அப்பா உறங்கிய நேரம் குறைவு என்று சொல்லியிருக்க வேண்டும்.  பெண்களாய் இருந்த காரணத்தினால், எங்களை விட்டு அவர் விலகியிருந்தாலும், அவரின் அதீத பாசத்தை நாங்கள் உணரத் தவறியதில்லை என்று சொல்லியிருக்க வேண்டும்.  எங்கள் மூவருக்கும் அருமையான கணவர் வாய்த்தற்க்குக் காரணம் என் அப்பா தான் என்று சொல்லியிருக்க வேண்டும்.   எங்கள் ஒவ்வொருவருக்கும் என் அப்பா பார்த்த ஜாதகங்கள் எண்ணிலடங்கா என்றும்,  ஜாதகங்களுக்காக நடையாய் நடந்து, கிடைத்த  ஜாதகங்களை அலசி, ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் அலசி, ஆராய்ந்து, மிகச் சிறந்த ஜாதகத்தை தேர்ந்தேடுத்து, எங்களுக்கு திருமணம் செய்வித்த நேர்த்தியை சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் என் அப்பா எங்களைக் கவனித்துக் கொண்ட அழகை சொல்லியிருக்க வேண்டும்.  குழந்தை பிறந்த பின் பத்திய உணவைத் தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாது என்று, கருவுற்றிருக்கும் காலத்தில் (என் அம்மா பொறாமை கொள்ளும் விதமாக)எங்களுக்காக என் அப்பா செய்த திரட்டிப் பாலைப் பற்றியும், வாரம் தவராமல் அடையார் கிராண்ட் ஸவீட்ஸால் எங்கள் வீட்டை நிரப்பியதைப் பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.  வருடம் தவறினாலும், பண்டிகைகளுக்காக என் அப்பா தரும் சீர் தவறியதில்லை என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஒவ்வொரு முறையுன் இந்தியாவிலிருந்து கிளம்பும் போதும், பெட்டி முழுவதும், அவர் வாங்கி நிறைக்கும் உணவுப் பொருட்களைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்.  இன்னும் நிறைய சொல்லி இருக்க வேண்டும்.  தானே பார்த்து பார்த்து கட்டிய எங்கள் வீட்டைப் பற்றியும், இதோ இங்கு வந்து  படுக்ககையில் வந்து படுக்கும் வரை சுறுசுறுப்பாய் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததையும், தன் துணிகளை தானே கைகளால் தோய்த்து, உலர்த்தி, இஸ்த்திரி செய்ததையும்,  என்ஜியனாராய், எலெக்டீரீஷனாய், ப்ளம்பராய்,  நல்ல நாள் பார்க்கும் ஜோசியராய்,  உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்த ஞானியாய், எல்லா சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் ஆஸ்தான ஆலோசகராய் என்று தேவைக்கேற்ப அவர் எடுக்கும் பல அவதாரங்களைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்.  இவற்றில் ஒன்றை கூட சொல்லாமல் வாய் மூடி ஊமையாய் நின்று இருந்தேன்.

மீண்டும் அன்று இரவு  என் அப்பாவை காண சென்றபோது, விழிப்பும் இல்லாமல், உறக்கமும் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருந்தார்.  நான் வந்தது அவருக்கு தெரியவில்லை. வாய் எதையோ முணுமுணுப்பது போல் இருந்தது.  எதை சொல்லிக் கொண்டிருப்பார்….73 வயதில் கற்க ஆரம்பித்து, பின் இடைவிடாது அத்ய்யனம் செய்து வந்த வேத உபனிஷத் மந்திரங்களையா அல்லது  வழக்கமாய் சொல்லும்  சஹஸ்ரநாமமா  தெரியவில்லை.  (பீஷ்மர் ஸஹஸ்ரநாமம் கூறியது  ஒரு முறை.  என் அப்பா தன் வாழ்நாளில் ஸஹஸ்ரனநாமம் சொன்னது தோராயமாக 43,800 முறை.ஒரு நாளைக்கு இரு முறை, 20 வயதில் சொல்ல ஆரம்பித்து இருந்தாலும், 84 வயது வரை, ஏறக்குறைய 60 வருடங்கள்).  சிறிது நேரம் நின்று பார்த்து, வந்துவிட்டேன்.

அடுத்த நாள் வெள்ளி காலை சென்றபோது, என் அப்பா படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். .

"ஏண்டி, அவர் வரலையா?"

"இல்லப்பா."

அவர் வந்திருந்தால் படுக்கையை விட்டு எழுந்து வரவேற்றிருப்பாரோ என்னவோ.  என் அப்பா மாப்பிள்ளைகளுக்கு செய்யாத  விஷயங்கள் இரண்டு. அவர்கள் வீட்டிற்கு வரும்போது சிகப்பு கம்பளம் விரித்ததில்லை, பூரண கும்ப மரியாதை செய்ததில்லை.  அவ்வளவே.  மற்றபடி மாப்பிள்ளைகள் வருகிறார்கள் என்றால் என் அப்பா தயாராகிவிடுவார்.  அவர்களுக்காக என் அம்மா சிறப்பாக சமைப்பது போதாதென்று, தானே கடைகளுக்குச் சென்று தன் பங்கிற்கு இனிப்பும், காரமும் அள்ளிக் கொண்டு,  அவர்கள் உண்பதற்கு மற்றவர்கள் சாப்பிட்ட தட்டோ, காய்ந்த சரகு இலையோ கூடாது என்று,வாழை இலைப் பார்த்து வாங்கி வருவார். அவர்கள் வரும்போது உடலும், உள்ளமும், மனமும் பொங்க வரவேற்று, ஆசனமிட்டு,  மிகுந்த ஆர்வத்துடன் உரையாடி, அவர்கள் திக்கு முக்காடி போகும் படி விருந்து பரிமாறி,….அப்ப்ப்பா.

"ஏண்டி, குழந்தை எங்க சாப்பிடுவான்?"   என் மகனைப் பற்றிய கவலை அவருக்கு.

"அவனுக்கு என்னப்பா, ஜாலியா வெள்ள ஏதாவது வாங்கி சாப்டுவான். இல்ல, அவர் எதாவது பண்ணி தருவார்."

"மேடம், டாக்டர் ரொளண்ட்ஸ் வர நேரமாச்சு," என்றாள் முன் தினம் பார்த்த தாதிகளில் ஒருத்தி.

"சரிப்பா, ராத்திரி வரேன்," என்று சொல்லிவிட்டு வந்தேன்.

வெள்ளி இரவு 6.45.  இது தான் அப்பாவைப் பார்க்கும் கடைசி முறை என்று தெரியாமல் உள்ளே நுழைகிறேன்.  என் அப்பா கண்ணை மூடி படுத்திருந்தார்.  நெற்றியில் என் அக்கா வைத்து விட்ட ஆஞ்சனேயரின் குங்குமம். அந்த குங்குமத்தினாலா இல்லை எதனால்  என்று தெரியவில்லை, என் அப்பா அழகாக இருந்தார், மிக அழகாக இருந்தார்.  நான் பக்கத்தில் சென்றவுடன் கண் திறந்து பார்த்தார்.

"அப்பா, டெஸ்ட் ரிஸல்ட்லாம் வந்துடுத்து.  நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்காம்.  பார்த்தசாரதி உன்னை காப்பாத்திட்டார்."

என் அப்பா வாய் விரித்து சிரித்தார்.  நெற்றியின் குங்குமம், வாய் விரித்த சிரிப்பும் மனதில் ஆணி அடித்தது போல் நின்று விட்டது.

"ஆமாம்.  பார்த்தசாரதி என்னை காப்பாத்திட்டார்."

பின் எதோ கூறினார்.  முகத்தில் இருந்த்த மாஸ்க்கினால் அவர் பேசியது புரியவில்லை.

"அப்பா, என்ன சொல்றேனு  புரியலை பா."

கையால் எழுதுவது போல் சைகை காண்பித்தார்.

"பேப்பர், பேனா வேணுமா எழுதிக் காமிக்க?நாளைக்கு எடுத்துண்டு வரேன்."

என் அப்பா தலையை அசைத்தார்.

"நீ ரெஸ்ட் எடுத்துகணுமாம். உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ண கூடாதாம்.  நாளைக்குக் கார்த்தால வரேன்."

"சரி" என்பது போல் தலையசைத்தார்.

நானும் தலையசைத்து விட்டு வந்துவிட்டேன், விடியப் போகும் காலையைப் பற்றி தெரியாமல்.

சனிக்கிழமை விடியல்.  என் அப்பா மீண்டும் கடவுளோடு பேசியிருக்க வேண்டும்.

"ஹே கிருஷ்ணா, உன்னுடன் வருவதற்கு தயாராகி விட்டேன்.  என்னை அழைத்து செல்."

"ஏன் இருப்பதற்கு ஆசை இல்லையா?"

"இருப்பதற்கு ஆசை இல்லை.   வருவதற்கு சிறிது வருத்தம் உள்ளது.  என் பேரப் பிள்ளைகளையும், இரண்டு மாப்பிள்ளைகளையும் பார்க்க இயலவில்லை.  அதையும் மீறிய மிகப் பெரிய வருத்தம், ஐம்பது ஆண்டுக்கு மேல் என்னுடன் இருந்த என் மனைவியை விட்டு பிரிந்து செல்வது.  என்னை சார்ந்தே இருந்து விட்டாள்.  ஒரு நாளும் என் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டாள்.  என் பெண்கள் இன்று என் மேல் அளவு கடந்து மதிப்பும், மரியாதையும், பாசமும் வைத்தற்கு அவள் காரணம்.  அவளை விட்டு வருவதற்கு தான் மனதில்லை."

"இருந்து விட்டு வாருமே?"

"இல்லை. இதற்கு மேல் இருக்க முடியாது.  என் முதல் பெண்ணும், மாப்பிள்ளையும், பேரனும் எனக்காக இரவு பகல் பாராமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  என் மனைவியின் பிறந்தகம் எனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.  என் அண்ணாவின் குடும்பம் எனக்காக விழித்துக் கொண்டிருக்கிறது.  கணவரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு எனக்காக வந்திருக்கும் என் பெண்கள் மீண்டும் அவர்கள் இடம் செல்ல வேண்டும்.  நான் இன்னும் ஒரு நாள் தாமதம் செய்தாலும் எல்லோருக்கும் சிரமம்.  மேலும் இருந்தவரை யாரையும் அண்டாமல், யார் வீட்டிலும் தங்காமல் வாழ்ந்தாகிவிட்டது.  நான் குணமாகி வந்தால் அதே போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.  அதனால் இதோ புறப்பட தயாராகி விட்டேன்."


தன் கர்மாவைத் தொலைப்பதற்காக ஒரு வாரம் படுத்திருந்துவிட்டு, 26-4-2014 அன்று, மேகங்கள் வாத்ய கோஷம் முழங்க, கின்னர் கெருடர்கள் கீதங்கள் இசைக்க, கடல் அலைகள் கை அடித்து ஆர்பரிக்க, சூரியனும், சந்திரனும் பாதைக்கு ஒளி கொடுக்க,  என் அப்பா மிக்க கோலாகலத்துடன் வைகுந்தம் புகுந்தார்.

எங்கள் வருகைக்காக காத்திருந்து, நாங்கள் இந்திய மண்ணைத் தொடும் சமயம் அழுவது கூடாது என்று தான் குணமாகி வருவதாக நல்ல சேதி அனுப்பி, நாங்கள் வந்ததும் "எதிர்பார்தவர்கள் வந்துவிட்டார்கள், இனி போகலாம்," என்று உடனே செல்லாது, எங்களுடன் இரண்டு நாட்கள் பேசி, சிரித்து…..இவையனைத்தையும் நடத்த என் அப்பா இருந்தது அம்பு படுக்கையயில்.